அரசியல் கட்சி ஆரம்பிக்காமலேயே இத்தனை பெரிய வெற்றி பெற்றதை விஜயே எதிர்பார்க்கவில்லை.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். விஜயும் தனது ஆசையை மேடைகள் தோறும் முழங்குவார். ஜெயலலிதா, கருணாந்தி காலத்திலேயே புள்ளிங்கோ ஆதரவால் அரசியலில் கால்தடம் பதிக்க மாஸ்டர் ப்ளான் போட்டு வந்தார் விஜய்.
தலைவா படம் மூலம் டைம் டூ லீட் கேப்சன் வைத்து படம் எடுத்து ஆசையை வெளிப்படுத்தியதால் படாதபாடு பட்டார் விஜய். அந்தப்படத்தில் இருந்து ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் விஜய்க்கு சிக்கல்கள் தான்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகும் இந்தச் சிக்கல் தொடர்ந்தது. அதிமுகவினர் இப்படி சிக்கல் கொடுத்து வந்த நிலையில்தான் ஜி.எஸ்.டி குறித்து கருத்து தெரிவித்து பிகிலில் பிஜேபியிடன் மாட்டி திகிலடைந்தார் விஜய். அடுத்து தளபதி பட்டம் சூட்டிக் கொண்டதால் திமுகவிடமும் திக்குமுக்காடிப்போனார். இந்நிலையில்தான் சத்தமே இல்லாமல், கட்சியே ஆரம்பிக்காமல் தமது ரசிக புள்ளீங்கோவை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சத்தமில்லாமல் யுத்தம் செய்ய களமிறக்கினார்.
அதில் ஆச்சர்யப்படும் அளவிற்கு வெற்றிகளையும் அள்ளினர்.கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி விஜயை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில், வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று முன் தினம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் விஜய் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது அவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களையும் அவர் தனது பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான முன்னோட்டமாக இச்செயல் பார்க்கப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மலரவிருக்கிறது என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
அரசியல் கட்சி ஆரம்பிக்காமலேயே இத்தனை பெரிய வெற்றி பெற்றதை விஜயே எதிர்பார்க்கவில்லை. ஆகையால் விரைவில் முறைப்படி கட்சி,கொடியை அறிமுகம் செய்து விரைவில் விஜய் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.