விஜய் ரசிகர்களின் வாக்கை தே.மு.தி.க.வுக்கு திருப்ப துடிக்கும் பிரேமலதா... ‘குளிர் விட்டுப் போனதன்’ குபீர் பின்னணி

By vinoth kumarFirst Published Nov 12, 2018, 5:32 PM IST
Highlights

விஜய் மாதிரியான இளைஞர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு உள்ள ஹீரோ தங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தால், தேர்தலில் ஜமாய்க்கலாம் என்பது பிரேமலதாவின் கணக்கு. ஆக அதற்கும் சேர்த்துத்தான் சர்காருக்காக குரல் கொடுத்திருக்கிறார் பிரேமா.

சர்காரை எந்தளவுக்கு அ.தி.மு.க. கழுவிக் கழுவி ஊற்றுகிறதோ அதே அளவுக்கு எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து விஜய்க்கு ஆதரவுக் கரம் நீளத்தான் செய்கிறது. கமல், ரஜினி வரிசையில் கேப்டன் விஜயகாந்த் என்ன சொல்லியிருக்கிறார்? என்று எல்லோருமே தேடினார்கள், எதிர்பார்த்தார்கள். ஆனால் விஜயகாந்த் உடல் நலம் சரியாக இல்லாத நிலையில், களமிறங்கியிருக்கும் பிரேமலதா குரல் கொடுத்திருக்கிறார். 

கேப்டன் அளவுக்கு இறங்கி அடித்திருக்க மாட்டாரே? என்று நினைத்தால்! மனுஷி தரையிறங்கி தட்டிக்கிளப்பியிருக்கிறார். “சர்கார் படம் ரிலீஸான பின் சில காட்சிகளை நீக்கிட சொல்லி அ.தி.மு.க.வினர் வலியுறுத்துகின்றனர். அப்படியானால் சென்சார் செய்தவர்கள் என்ன தவறாகவா செய்துவிட்டார்கள்? இந்தப் படத்துக்கு இவ்வளவு பிரச்னைகளை செய்த அ.தி.மு.க.வை வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதா இறந்ததால் அமைச்சர்களுக்குதான் குளிர் விட்டுப்போயிடுச்சு. அவர் இருக்குறப்ப எந்த அமைச்சர் பாட்டுப் பாடினார், நடனம் ஆடினார்?” என்று விளாசியிருக்கிறார்.

 

பிரேமாவில் பாய்ச்சலில் கடுப்பாகி, அமைச்சர் ஜெயக்குமார் மறு பாய்ச்சல் காட்டுமளவுக்கு நிலைமை போய்விட்டது. தனக்காக பிரேமலதா குரல் கொடுத்திருப்பதில் விஜய்க்கு பெரிய சந்தோஷம் தான். ஆனால் பிரேமலதா தரப்போ இதன் மூலம் ரெட்டை கணக்கு போடுகிறது. அதாவது, விஜயகாந்த் திரையுலகில் நுழைந்து மெதுவாக உயர துவங்கிய புதிதில் புரட்சிப் படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து கரம் தூக்கிவிட்டவர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். 

விஜயகாந்த் உயரம் தொட, சந்திரசேகரின் தோள்களும் காரணம். அந்த உதவிக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில் பிரேமா பேசியுள்ளார். 
அதேபோல், விஜயகாந்தின் ஆரோக்கிய சரிவினால் அதலபாதாளத்துக்கு சென்று விட்ட தே.மு.தி.க.வை தட்டி எழுப்பிட பிரேமலதாவால் மட்டும் முடியாது. அரசியலுக்குள் இப்போதுதான் எட்டிப்பார்க்கும் அவரது மூத்த மகனால்  கட்சி தாண்டி வெளியே இருந்து சில நூறு வாக்குகள் கூட வாங்கித் தர முடியாது.

 

இந்நிலையில் விஜய் மாதிரியான இளைஞர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கு உள்ள ஹீரோ தங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தால், தேர்தலில் ஜமாய்க்கலாம் என்பது பிரேமலதாவின் கணக்கு. ஆக அதற்கும் சேர்த்துத்தான் சர்காருக்காக குரல் கொடுத்திருக்கிறார் பிரேமா. எப்படியானாலும் விஜய் இப்போதைக்கு கட்சி துவங்க போறதில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நிச்சயம் குரல் கொடுப்பார், அல்லது தனது லட்சோப லட்சம் ரசிகர்களை அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டுப்போட சொல்வார். 

அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்றாலும், ஏற்கனவே ஸ்டாலினுடன் விஜய்க்கு பகை இருக்கிறது. பி.ஜே.பி.யின் உறவும் மெர்சலோடு விஜய்க்கு முடிந்துவிட்டது. ஆக காங்கிரஸ், கமல் அப்படியிப்படி என்று வேறு யாரும் முந்தும் முன்னதாக விஜய்யின் செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு திருப்பிவிட பிரேமா போட்டிருக்கும் பலே கணக்குதான் இந்த குரல் என்கிறார்கள். விஜயகாந்தை, விஜய் அண்ணா என்றுதான் அழைப்பார். அந்த வகையில் அண்ணி பிரேமலதா விஜய்காக குரல் கொடுத்துள்ளது அடடா! அடடே அடடா! அரசியலுங்ணா.

click me!