தாயை வணங்காமல் வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்?.... அப்சல் குருவையா?  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேள்வி

First Published Dec 9, 2017, 12:13 AM IST
Highlights
vice president vengaiah naidu speech


‘‘தாயை வணங்கமாட்டேன் என்றால், வேறு யாரை வழங்கப் போகிறீர்கள்? ...அப்சல் குருவையா...-?’’ என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான அசோக் சிங்காலின் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வெங்கையா நாயுடு கூறியதாவது-

வந்தே மாதரம்

‘‘இந்தியாவில் பலருக்கும் வந்தே மாதரம் என்று சொல்வதில் என்ன சிக்கலோ தெரியவில்லை. கேட்டால் தேசியம் என்ற பெயரில் இந்துத்வாவைத் திணிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்.

வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணை வணங்குகிறோம் என்று தான் பொருள். இந்தியாவில் பிறந்து விட்டு தாய் மண்ணை வணங்குவது தானே தேசபக்தியாக இருக்க முடியும்?.

அப்சல் குருவையா?

இங்கே இந்துத்வா எங்கிருந்து வந்தது? நீங்கள் உங்கள் தாயை வணங்க மாட்டீர்கள் என்றால், வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்ஸல் குருவையா?

யாராவது ‘பாரத் மாதாகி ஜே’ என்று சொன்னால், அவர்கள் பாரதமாதா என்ற தேவதையை வணங்குவதாக மட்டுமே அர்த்தமில்லை.

‘வாழ்க்கை முறை’

பாரதமாதா என்பவர் யார்? அந்த உருவில் இருப்பது இந்தியாவின் 125 கோடி மக்கள் அல்லவா? பாரத் மாதா கி ஜே என்றால், ஜாதி, மத, இன வேறுபாடு அற்ற ஒட்டுமொத்த இந்தியர்களையும் அந்தப் பெயரால் வணங்குகிறோம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள்.

1995 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இந்துத்வா என்றால் அது மதத்தைக் குறிக்கவில்லை. அது ஒரு வாழ்க்கை முறை. அதை மதத்தின் பெயரால் குறுக்க வேண்டியதில்லை. இந்துயிஸம் என்பது குறுகிய கருத்து அல்ல, அது இந்தியாவின் பரந்த கலாச்சாரக் கருத்தாக்கம்.

ெபாறியியல் மாணவர்

அசோக் சிங்கால் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், அவர் ஒரு சிறந்த இந்துத்வா தலைவர்களில் ஒருவர். தனது வாழ்வின் கடந்த 75 வருடங்களை இளம் தலைமுறையின் எதிர்கால நலன்களுக்காக அர்ப்பணித்தவர்களில் மிக முக்கியமானவர் அவர்.

அடிப்படையில் பொறியியல் மற்றும் விஞ்ஞான மாணவராக இருந்த போதிலும் தனது வாழ்வை கங்கைக் கரைகளில் செலவளித்து மதம், சமுதாயம் மற்றும் கலாச்சாரப் பிரதிநிதியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்.

click me!