கொறடாவின் உத்தரவை மீறி செயல்படவே இல்லை என்றபோது தகுதிநீக்க நடவடிக்கை என்பது ஜனநாயகப் படுகொலை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், சட்டமன்றத்தில் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டாலோ அல்லது கட்சி மாறினாலோதான் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வகையில் தற்போது சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கை என்பது ஜனநாயகப் படுகொலை என விமர்சித்தார்.
அப்படிப் பார்த்தால் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றபோது பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும்தான் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த நடவடிக்கை அராஜகத்தின் உச்சம் என விமர்சித்த வெற்றிவேல், இந்த விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க தயார் என தெரிவித்தார்.
இதற்கிடையே செய்தியாளர்கள் முதல்வர் பழனிச்சாமி என கூறி ஒரு கேள்வி கேட்டதற்கு, முதல்வர் என்றெல்லாம் சொல்லாதீர்கள் எனவும் பழனிச்சாமியைத் தான் ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை எனவும் விமர்சித்தார்.