
தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு அவமானத்துக்குரியவை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு நேற்று முன் தினம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடந்தது.
அதில் கலந்து கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு, சபாநாயகரின் இருக்கை, மைக், ஆகியவற்றை உடைத்து கடும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபையின் காவலர்கள் மூலம் திமுக வினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடந்த சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு அவமானத்துக்குரியவை. அனைத்து விசயங்களும் மீண்டும் மறுஆய்வுசெய்யப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் பார்க்க வேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை மக்கள் தங்களின் முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகள் இப்படி நடந்து கொண்டால், மக்கள் ஜனநாயக மரபுகளின் மீதும், அரசியல் முறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்'' எனத் தெரிவித்தார்.