
ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கிய பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி 11 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்தனர். மேலும் ரிசார்டிலிருந்து தப்பி வந்த எம்.எல்.ஏக்கள் தங்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்திருந்ததாகவும், மேலும் பலர் அடைத்துவைக்கபட்டுள்ளதகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து ரிசார்ட்டில் உள்ள சில எம்.எல்.ஏக்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதாகவும், குடும்பத்துடன் ஜாலியாக வசித்து வருவதாகவும் பேட்டி அளித்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர். மேலும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிக்க சொன்னால் சசிகலாவிடம் பணம் வாங்கி கொண்டு ரிசார்ட்டில் குதூகலமாக இருக்கிறார்கள் என புகார் எழுந்தன.
பின்னர், சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அதனால் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுனரை நேரில் சந்தித்து எடப்பாடி எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை கொடுத்தார். இருந்தாலும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
ஏற்கனவே கூவத்தூரில் தங்கி இருந்த எம்.எல்.ஏக்கள் அங்கயே பட்டா போட்டுவிட்டனர். ஆளுநர் எடப்பாடியை பதவியேற்க அழைக்கும்வரை தொகுதி பக்கம் செல்லமாட்டோம் என எம்.எல்.ஏக்கள் சபதம் எடுத்தனர்.
இதையடுத்து ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி முதல்வராக பதவியேற்றார். மேலும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியதால் நேற்று சிறப்பு சட்டபேரவையை கூட்டி எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.
அதனால் கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்கள் தொகுதி பக்கம் நகர ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், தொகுதி பக்கமே வராமல் கூவத்தூர் ரிசாட்டில் தங்கி இருந்ததாக கூறி சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சக்திவேல் வீட்டை அந்த தொகுதிவாசி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான சக்திவேல் அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த தொகுதியை சேர்ந்த பெண்கள் தொகுதி பக்கமே வராமல் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த சக்திவேல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ சக்திவேல் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்ததை நாங்கள் ஏற்கமுடியாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சொந்த தொகுதியில் எடுக்கவேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சொகுசு பங்களாவில் தங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர்.