
மக்கள் நலக்கூட்டணியின் முக்கிய அங்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது.
சில நாட்களுக்கு முன்பு திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் முதலில் பங்கு பெறுவோம் என்றும், பின்னர் பங்கு பெற மாட்டோம் என்றும் தட்டு தடுமாறியது அக்கட்சி.
மு.க.ஸ்டாலினுக்கு விளக்க கடிதமும் எழுதினார் திருமாவளவன். பின்னர் மு.க.ஸ்டாலினும் திருமாவளவனுக்கு பதில் அறிக்கைவிட்ட சம்பவங்களும் அரங்கேறின.
நடைபெற உள்ள 3 தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், திடீரென புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது வி.சி.க.
அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆதரவு கடிதத்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் இன்று நேரடியாக சென்று கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
புதுச்சேரிக்கு எடுத்த முடிவுகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்றும், நாராயணசாமிக்கு ஆதரவு அளிப்பது குறித்து இடதுசாரி கட்சிகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணயில் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்து காங்கிரசுக்கு ஆதரவு அளித்திருப்பது ம.ந.கூ.கலகலக்க தொடங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.