வெளியேறு வெளியேறு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறு வெறும் ஒரு தொகுதிக்காக 39 இடங்களில் உழைக்கவேண்டுமா? என வாசகம் அடங்கிய போஸ்டர்கள் சிதம்பரம் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை திமுகவில் இருந்து வெளியேரும்படி அவரின் கட்சியை சார்ந்த தொண்டர்களே கோரிக்கைவைத்திருக்கின்றனர். இந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போஸ்டராக அடித்து சிதம்பரம் பகுதி முழுவதும் ஒட்டி இருக்கின்றனர். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம். என்பதையே இந்த போஸ்டரில் முக்கிய செய்தியாக தெரிவித்திருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள்.
மத்தியில் மோடியின் ஆட்சிக்காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தான் இனி இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கவிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் நிலவரம் வேறு எப்போது என்ன நடக்கும் என கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் யார் யாருடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டி இடப்போகின்றார் எனும் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அதே சமயம் இப்போது பிரிவுபட்டு கிடக்கும் அதிமுகவை விட திமுகதான் நாடாளுமன்ற தேர்தலில் பெஸ்ட் சாய்ஸ் என அரசியல் வட்டாரத்தினர் கருதுகின்றனர். ஆனால் திமுக மீது ஏற்கனவே 2ஜி வழக்கில் அதிருப்தியில் இருக்கின்றனர் மக்கள். இந்த கால இடைவெளி 2ஜி விஷயத்தினை மக்கள் மனதில் மறக்கடித்திருந்தாலும், மீண்டும் அதே விஷயத்தை தங்கள் போஸ்டரில் ஹைலைட் செய்திருக்கின்றனர் விடுதலை சிறுத்தை கட்சியினர்.
திருமாவளவனுக்கு அறிவுரை கூறும் விதமாக அடிக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில் ஒரு இடத்துக்காக 39 இடத்தில் உழைக்க வேண்டுமா? திமுக கூட்டணியில் இருந்து வெளியேறு. தனித்தன்மையோடு சிதம்பரத்தில் மீண்டும் தனித்து வெற்றி பெறுவோம். 2ஜியை நாம் சுமக்க வேண்டாம்.
தம்பிகள் இருக்கிறோம் தயங்காதே என வீராவேசமாக கேட்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தை கட்சியினர். இந்த போஸ்டர் விவகாரம் கூறித்து இதுவரை திருமாவளவன் எந்த வித பதிலும் கொடுக்கவில்லை என்பது தான் இந்த போஸ்டருக்கு இப்போதைக்கு கிடைத்திருக்கும் பதில்.