ஆர்.என்.ரவி பேசுவது திமுகவுக்கு சாதகம்னா! கல்யாண வீட்டில கூட ஆளுநரை நினைச்சு எதுக்கு கதறிங்க! வானதி சீனிவாசன்!

Published : Oct 29, 2023, 07:11 AM ISTUpdated : Oct 29, 2023, 07:37 AM IST
ஆர்.என்.ரவி பேசுவது திமுகவுக்கு சாதகம்னா! கல்யாண வீட்டில கூட ஆளுநரை நினைச்சு எதுக்கு கதறிங்க! வானதி சீனிவாசன்!

சுருக்கம்

திமுகவின் கொள்கை ஆசான், மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பற்றி தமிழ்நாடு ஆளுநர் பேசியதிலிருந்து திமுகவினரிடம் ஒருவித பதற்றத்தைப் பார்க்க முடிகிறது. 

சந்தர்ப்பவாத அரசியலுக்காக திராவிடம் என்று சொல்லி தமிழ், தமிழ்நாட்டை திமுக கொச்சைப்படுத்துகிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவலியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னையில் நேற்று முன்தினம் (27.10.2023)  நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "திராவிடம் என்றால் என்ன? இப்போது நடந்து கொண்டிருக்கிற கல்யாணம் - இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருக்கிறதே, அதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன? என்று  கேட்கிறாரே அவரே தொடர்ந்து இருக்க வேண்டும். அது இன்னும் நம்முடைய பிரச்சாரத்திற்கு வலு சேர்த்துக்கொண்டே இருக்கிறது.  தயவு செய்து இங்கே இருக்கக்கூடிய ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றவேண்டாம் என்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது இருக்கவேண்டும். அதில் எங்களுக்கு பல சௌகரியங்கள்.  இன்றைக்குப் பொதுமக்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை" என பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க;- இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற மனமில்லாத மதச்சார்பற்ற தமிழக அரசுக்கு கோயில்களில் என்ன வேலை? வானதி சீனிவாசன்

திமுகவின் கொள்கை ஆசான், மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பற்றி தமிழ்நாடு ஆளுநர் பேசியதிலிருந்து திமுகவினரிடம் ஒருவித பதற்றத்தைப் பார்க்க முடிகிறது. மதமாற்ற வந்த அன்னிய சக்திகள் போட்ட விதை தான் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகி, இப்போது திமுகவாகி இருக்கிறது என்ற உண்மை, சாதாரண மக்களிடமும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம் திருமண வீட்டில் கூட முதலமைச்சரின் நிம்மதியை குலைத்திருக்கிறது. என் மனைவி கிறிஸ்தவர் என பகிரங்கமாக பிரகடனம் செய்த முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை ஒழிப்பேன் என பேசியது, தமிழ்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதை மறைக்க திமுகவினர் எது எதையோ செய்து கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் ஆதி வரலாற்றையெல்லாம் ஆளுநர் பேசினால் திமுகவினருக்கு பதற்றம் வரத்தான் செய்யும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

அதனால்தான் இதுவரை ஆளுநரை நீக்க வேண்டும் என குடியரசுத்தலைவர் மனு கொடுத்து கொண்டிருந்தவர்கள், கூட்டணி கட்சிகளை விட்டு கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள், இப்போது ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என பேசி தங்களுக்கு தாங்களே ஆறுதல் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுகவினரின் இந்த நிலை பரிதாபமாக இருக்கிறது. ஆளுநர் பேசுவது திமுகவுக்கு சாதகம் என்றால், கல்யாண வீட்டில் கூட ஆளுநரை நினைத்து, நினைத்து ஏன் கதற வேண்டும்? 'ஆரிய - திராவிட இனவாதம்' என்பது மதம் மாற்றுவதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட, கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் பரப்பிய கட்டுக்கதை. ஆரிய - திராவிட இனவாதம் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. 

ஆரிய - திராவிட இனவாதம் பேசி குறுகிய அரசியல் செய்யும் திமுகவினர், ஆரியர்கள் யார் என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும்.  திமுகவால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , தன்னை பூணூல் அணிந்த பிராமணர் என்று பகிரங்கமாக அறிவித்தவர். அவர் ஆரியரா? திராவிடரா? குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின பெண்மணி திரெளபதி முர்மு அவர்களை ஆதரிக்காமல், திமுக ஆதரித்த யஷ்வந்த் சின்கா ஆரியரா? திராவிடரா? திமுக கூட்டணி வைத்துள்ள மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரெல்லாம்  ஆரியர்களா? இல்லையா என்பதை திமுக தெளிவுப்படுத்த வேண்டும். 

இதையும் படிங்க;- இந்து மதத்தின் மீது வெறுப்பை வைத்திருக்கும் ஸ்டாலின்! பாஜகவை பார்த்து வகுப்புவாதம் என்கிறார்! வானதி சீனிவாசன்!

திராவிடம், திராவிடர் என்று சொல்லிக் கொண்டே, திமுக ஆட்சிக்கு வர காரணமான எம்.ஜி.ஆர். அவர்களை, 'மலையாளி' என்றும், கால் நூற்றாண்டு காலம் திமுகவை தூங்க விடாமல் செய்த ஜெயலலிதா அவர்களை, 'கன்னடர்' என்றும், கருணாநிதி அவர்களின் வாரிசான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பட்டாபிஷேகம் நடத்துவதை எதிர்த்தார் என்பதற்காக வைகோ அவர்களை, 'கலிங்கப்பட்டி தெலுங்கர்' என்றும் ஏளனம் செய்தவர்கள், இன்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். இதைவிட பச்சையான சந்தர்ப்பவாதம் இருக்க முடியாது.

இப்படி சந்தர்ப்பவாத அரசியலுக்காக திராவிடம், திராவிடர் என்று திரும்ப திரும்பச் சொல்லி, தமிழ், தமிழ்நாடு என்பதை திமுக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்களை திராவிடர்கள் என்று அழைப்பதைக் காட்டிலும் தமிழ் மொழி, தமிழர்களுக்குச் செய்யப்படும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் இப்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையான வரலாற்றை படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இனி திமுகவின் கட்டுக்கதைகள் மக்களிடம் எடுபடாது  என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?