
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ள நிலையில், சபாநாயகர் வைத்தியலிங்கமும் டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் மோதல்போக்கு நிலவி வருகிறது. இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கிரண்பேடி, பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் கிரண்பேடி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை முடக்கும் வகையில் செயல்படுகிறார் என்றும் ஜனநாயக நெறிமுறைகளை மீறி விட்டார் என்று கூறியும் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகட்சிகள் உள்ளிட்டவை சனிக்கிழமை அன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.
இன்று டெல்லி புறப்பட்ட ஆளுநர் கிரண்பேடி, 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செய்யாததை புதுவை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் குடியரசு தலைவர், பிரதரை சந்தித்து முறையிட உள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கம் டெல்லி புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, 3 நியமன எம்.எல்.ஏ.க்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ள நிலையில், புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கமும் டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.