தேவதாசி என்பது உயர்ந்த குலத்தில் பிறந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என்றும், ஆண்டாள் தனக்கு தாய் போன்றவர் என்றும் விளக்கம் அளித்துள்ள கவிஞர் வைரமுத்து, ஞான சமுதாயமான தமிழ் சமூகம் இதை புரிந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற தமிழை ஆண்டாள் என்ற கருத்தரங்கில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை தெரிவித்தார் என குற்றம்சாட்டப்பட்டது.
அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வந்து அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிராமணர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வைரமுத்து கொலை செய்யப்பட வேண்டும் என கடுமையாக எச்சரித்தார்
திரையுலகைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், விசு. குட்டி பத்மினி உள்ளிட்டோரும் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப் போவதாக கூறினர். அதே நேரத்தில் படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து மீது யாராவது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எங்களை ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள் என பேசினார்.
இதையடுத்து வைரமுத்து மீது கொளத்தூர், ராஜபாளையம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்படடது. இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கூறி வைரமுத்துவிடம் விசாரணை நடத்த தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆண்டாள் குறித்து தான் தெரிவித்த கருத்து குறித்து இன்று கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்தார். அதில் ஆண்டாள் கவிதையில் அழகியல் கொட்டிக் கிடக்கிறது, அவரது கவிதையை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தாகவும் தெரிவித்தார்.
தேவதாசி என்பது உயர்ந்த குலத்தில் பிறந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என்றும், ஆண்டாள் தனக்கு தாய் போன்றவர் என்றும் வைரமுத்து விளக்கம் அளித்தார் . இத்தகைய ஆண்டாளைப்பற்றி பேசியது எனது தவறா என கேள்வி எழுப்பினார். ஞான சமுதாயமான தமிழ் சமூகம் இதை புரிந்து கொள்ளும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.