அமைச்சராகும் உதயநிதி..? அன்பிலை பேச வைத்தது துர்கா ஸ்டாலினா..? அதிருப்தியில் சீனியர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 2, 2021, 11:47 AM IST
Highlights

துர்கா ஸ்டாலின் வலியுறுத்தலில் தான் அன்பில் பேசினார் என்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்கள்.
 

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘எனது அருமை நண்பர் உதயநிதியின் பணிகள் ஒரு சட்டமன்றத் தொகுக்குள் அடங்கிவிடக் கூடாது. அவர் அமைச்சராகி அவரது பணிகள் தமிழகம் முழுவதும் இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதே போல்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நடந்தது. இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சில மாவட்டச் செயலாளர்கள் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பமணு அளித்தார்கள். ஆனால், ‘நான் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்று மறுப்பு தெரிவித்தார் உதயநிதி. அதன் பிறகு பல மாவட்டச் செயலாளர்கள் ‘உதயநிதி கண்டிப்பாக போட்டியிட வேண்டும்’ என்று வீட்டிற்கே சென்று வற்புறுத்தினார்கள்.

அதன் பிறகு, ‘வற்புறுத்தலின்’ பேரில் போட்டியிடுவதாக ஒப்புக்கொண்டார் உதயநிதி! ‘வரும்... ஆனா வராது’ என்று வடிவேலு பட பாணியை வைத்து உதயநிதி போட்டியிடுவதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால், அதையெல்லாம் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் விரும்புகிறாராம். அதனால்தான், துறைமுகம் தொகுதியில் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ‘அருமை நண்பர் உதயநிதியின் பணிகள் ஒரு தொகுதிக்குள் அடங்கிவிடக்கூடாது. அவரது பணிகள் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். எனவே அவருக்கு ‘அமைச்சர் புரமோஷன்’ தரவேண்டும் என்று ஓபனாகவே பேசினார் அமைச்சர் அன்பில் மகேஷ். துர்கா ஸ்டாலின் வலியுறுத்தி சொன்னதாலேயே அன்பில் அப்படி பேசினார் என்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்கள்.

முதன் முதலாக அன்பில் பேசிவிட்டார்... இனி அடுத்தடுத்து உள்ள ஜூனியர் அமைச்சர்களும், ‘உதயநிதி அமைச்சராக வேண்டும்’ என்று சொல்ல இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். அதன் பிறகு, தவிர்க்க முடியாத காரணத்தால், கட்சித் தலைமை உதயநிதிக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சித் துறையை ஒதுக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம். 

தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று வற்புறுத்தினாலும், ‘தங்களது மடியில்’ (துறைகள்) கை வைத்துவிடுவார்களோ? என்ற அச்சத்திலும் இருக்கிறார்களாம். உதயநிதிக்காக இனி அடுத்தடுத்த குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும் என்பதில் இனி சந்தேகமில்லை. பொருத்திருந்து பார்ப்போம்...!

click me!