Mamata Banerjee :இருந்தாலும் தீதிக்கு இவ்வளவு தலைகனம் கூடாது.. உட்கார்ந்து கொண்டே தேசிய கீதம் பாடி அவமரியாதை.

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2021, 10:58 AM IST
Highlights

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அமர்ந்துகொண்டே தேசியகீதம் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கீதத்தை அவமதித்ததாக பாஜக சார்பில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநில முதலமைச்சர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 294 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று 66 வயதான மம்தா மீண்டும் தனது அரியணையை தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், மேற்கு வங்கத்தில் தான் அசைக்க முடியாத சக்கி என்பதையும் நிரூபித்து காட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டத்தில் சிக்கி மர்ம நபர்களின் தாக்குதலுக்கு உள்ளான அவர் படுகாயமடைந்து பின்னர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார் என்பதுதான் அவரது வெற்றியின் சிறப்பு. கொல்கத்தாவின் அஸ்ரா பகுதியில் பிறந்த அவர் சிறு வயது முதலே வறுமையில் வாடியவர் ஆவார். பின்னர் தனது 15 வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் அக்காட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தீரத்துடன் போராடியவர் ஆவார்.

அக்கட்சியில் படிப்படியாக வளர்ந்த அது 1998 ஆம் ஆண்டு திருணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். தொடங்கியது முதலே தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரிகள் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் வென்று அரியணை ஏறினார் மம்தா. தற்போது அம்மாநிலத்தில் எவராலும் அசைக்கமுடியாத சக்தியாக  உருவெடுத்துள்ளார் அவர். பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக  எவ்வளவோ முயன்றும் மம்தாவை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவரின் எளிமை, போராட்ட குணம், மக்களுடன் இயைந்திருப்பது அவரின் மிகப்பெரும் பலமாக இருந்து வருகிறது. தற்போதைக்கு இந்தியாவில் இருக்கும் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையையும் அவரே பெற்றுள்ளார். வங்கத்துப் புலி என்றும், மேற்கு வங்கத்தின் ஜெயலலிதா என்று மக்களால் போற்றப்படும்  மம்தா பானர்ஜி முன்பிருந்ததை விட சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டுமென மக்கள் அவர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் அவரது கணவம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோல தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் இனிவரும் காலங்களில் திரிணாமுல் காங்கிரஸை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் கோவா, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனது காட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாஜகவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதே நேரத்தில்  உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி, ஆனால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல காங்கிரஸ் கட்சி, ஒரு பாஜக, மற்றொருபுறம் திரிணாமுல் காங்கிரஸ் என இரு கட்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. காங்கிரஸை காலி செய்து விட்டு அந்த  இடத்தைப் பிடிக்க மம்தா முயற்சி செய்கிறார் என்ற விமர்சனத்தையும் அவர் மூது காங்கிரஸ் வைத்து வருகிறது. அவரின் அரசியல் நகர்வுகள் அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் இருந்து வரும் நிலையில். ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் கடும் விமர்சனத்திற்கு அவர் ஆளாகி இருக்கிறார்.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மம்தா பானர்ஜி அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடியுள்ளதாகவும், பின்னர் எழுந்து நின்று பாடலை பாடியதுடன் அதை பாதியில் நிறுத்தி விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மம்தா பானர்ஜி மீது மும்பை பாஜக தலைவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் அமித் மாளவியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தேசிய கீதம் நம் தேசத்தின் அடையாளம், பொது பதவியில் இருப்பவர்கள் அதை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்திலும் பாஜக தலைவர்கள், பாஜக நிர்வாகிகள், மம்தா பானர்ஜிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, என்ன இருந்தாலும் மம்தா பானர்ஜிக்கு இந்த அளவிற்கு தலைக்கனம் இருக்கக் கூடாது. அவரது தொடர் வெற்றி அவரது கண்ணை மறைக்கிறது, எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்ன பதிவிட்டு வருகின்றனர். 
 

click me!