டிடிவி தினகரனுக்கு தனி கட்சி என்பது இல்லாததால் அவருக்கு சின்னமோ, பெயரோ ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தும் வகையில் குக்கர் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த வழக்கு விசாரணையில், மூன்று புதிய கட்சிகளின் பெயரையும் குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒரு அணியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தினகரன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்து வாதிட்ட தேர்தல் ஆணையம், டிடிவி.தினகரன் தனியாக கட்சி எதுவும் தொடங்கவில்லை. அவர் அதிமுகவின் தனி அணியும் கிடையாது. மேலும் அவர் கட்சி சம்பந்தமாக எந்த ஒரு பெயரையும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கையில் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை தினகரன் எப்படி கேட்க முடியும்.
மேலும் தமிழகத்தில் தற்போது உடனடியாக எந்த ஒரு தேர்தலும் வரவில்லை. அரசியல் கட்சிகளுக்கு சின்னம் என்பது அவர்களின் சொத்து கிடையாது. அதனால் தினகரனின் கோரிக்கை என்பது தவறானது என தெரிவித்து அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரேகா பாலி வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.15மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.