சித்தர் மரணம், சிதையும் கட்சி... துரத்தும் கெட்ட நேரம்... உச்சகட்ட வெறுப்பில் தினகரன்!

By vinoth kumarFirst Published Dec 13, 2018, 12:01 PM IST
Highlights

கடந்த சில நாட்களாக தினகரனுக்கு நேரம் சரியில்லை. தொடர்ந்து மிகப்பெரும் சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்! என்று அவரை நெருங்கி கவனிக்கும் வட்டாரங்களே கவலை தெறிக்க கூறுகின்றனர்.

‘மிஸ்டர் கூல்’ என்று எதிர்கட்சி தலைவர்களிடமே கூட பட்டம் வாங்கியவர் டி.டி.வி. தினகரன். எவ்வளவு இக்கட்டான சூழல் வந்தாலும் கூட பதறாமல், டென்ஷன் ஆகாமல், புன்னகையை உதட்டில் நிறுத்தியபடியே எல்லோரையும் எதிர்கொள்வது தினகரனின் ஸ்டைல். அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களைத் தாண்டி, மக்களுக்கு இதனாலேயே இவரை பிடித்தது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினகரனுக்கு நேரம் சரியில்லை. தொடர்ந்து மிகப்பெரும் சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்! என்று அவரை நெருங்கி கவனிக்கும் வட்டாரங்களே கவலை தெறிக்க கூறுகின்றனர். 

சித்தர் மரணமும், சிதைந்த கனவும்: தினகரன் தன் ஆஸ்தான குருவாக நினைத்தது திருவண்ணாமலையின் கிரிவல பாதையில் வாசம் புரிந்த மூக்குபொடி சித்தரைத்தான். வாய் திறந்து ஏதுவும் அவர் பேசாவிட்டாலும் கூட, எந்த முக்கிய காரியத்தை துவங்கும் முன்பும் மூக்குபொடி சித்தரை ஒரு தடவை நேரில் சென்று வணங்கிவிட்டு வருவார் தினகரன். அவரைப் பார்த்தாலே போதும் அருளாசி கிடைத்தமாதிரிதான், காரியம் கைகூடிவிடும்! என்று பெரியளவில் நம்பினார் தினகரன். 

திடீரென அரசியலில் தினகரன் பெரிய உயரத்தைத் தொடுவதற்கு இந்த மூக்குபொடி சித்தரின் ஆசிதான் காரணம் என்று அவரும், அவரைச் சார்ந்த நிர்வாகிகளும் நம்பினர். அதேபோல், பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தனக்கு நெகடீவ் ரிசல்ட் கிடைத்திருந்தாலும் கூட கூடிய விரைவில் சித்தரின் ஆசியோடு பெரிய அளவில் ஏற்றம் பெறுவேன்! என்று தன் சகாக்களிடம் சொல்லி வந்தார் தினகரன். நாடாளுமன்ற தேர்தல், இருபது தொகுதி இடைத்தேர்தல், இரட்டை இலை சின்னத்தை பெற பணம் கொடுத்ததான வழக்கு உள்ளிட்ட அத்தனையிலும் தனக்கு வெற்றியே கிடைக்க சித்தரைத்தான் நம்பி இருந்தார் தினகரன். 

ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மூக்குப்பொடி சித்தர் திடீரென மறைந்துவிட, தினகரனுக்கு உலகமே இருண்டுவிட்டது போலாகிவிட்டது. எது நடந்தாலும் ‘சமாளிப்போம்ல!’ என்று கெத்தாக  வலம் வருபவர், சித்தர் மரணத்தின் மூலம் உள்ளுக்குள் உடைந்துவிட்டாராம். சித்தர் இறந்த கையோடு, தன் ஜாதகத்தை எடுத்துக் ஒரு பிரபல ஜோதிடரின் கையில் கொடுத்துக் கணிக்க சொல்லியுள்ளார் தினகரன். ஜோதிடர் அடுக்கிய தகவல்களில் பாதி கூட தினகரனுக்கு சந்தோஷம் தருவதாயில்லையாம். சித்தர் மரணத்தின் மூலம் தன் கனவுகள் சிதைய துவங்கிவிட்டன! என்று வருந்துகிறாராம் தினா. 

காலை வாரும் செந்தில்பாலாஜி: ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களோடு இணையாமல் தன் பின்னே வரிசை கட்டியவர்களில், தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர். ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். 

எனக்காக  இல்லாவிட்டாலும் சின்னம்மா மீது வைத்திருக்கும் மிகப்பெரிய விசுவாசத்தினால் கடைசி நிமிடம் வரை தனக்கு தோள் கொடுப்பார் செந்தில்! என்று பெரிதாய் நம்பினார் தினகரன். ஆனால் தினகரனுக்கு நெருக்கடிகள் முற்றி நிற்கும் இந்த சூழலில், செந்தில்பாலாஜி தி.மு.க.வை நோக்கி நகர்வதை, ‘காலை வாருறான்யா!’ என்று வெறுப்பின் உச்சத்துக்கே போய் கத்தியிருக்கிறார் தினகரன். ’எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் டீம் செய்யுற கெடுதலை விட இந்த செந்தில்பாலாஜி செய்ய முயலுற துரோகம்தான் மொடுமையானது.’ என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

 

குழப்பிக் கொட்டும் தங்கத்தமிழ்செலவன்: தினகரனின் வட்டாரத்தில் நடுத்தர மற்றும் இள ரத்தங்களான தங்கதமிழ்செல்வனும், செந்தில்பாலாஜியும் அவரது தூண்கள் மாதிரி. இதில் தன்கம் பேசிப் பேசியே காரியத்தை சாதிப்பார், செந்திலோ வாயே திறக்காமல் வேலையை முடிப்பார். தினகரனுக்கு வெகு இக்கட்டான இந்த சூழ்நிலையில், செந்தில்பாலாஜி தி.மு.க.வை நோக்கி நகர, தங்கமோ கடந்த சிகொழு நாட்களாக உதிர்க்கும் வார்த்தைகள் தினகரனுக்கு நிம்மதியை தரவில்லை என்கிறார்கள். 

குறிப்பாக, ‘வலுவான தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமென்றால் அ.ம.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைய வேண்டும்.’ என்று அவர் கூறியது, ஆளும் தரப்பை நோக்கி தங்கத்தமிழ்செல்வன் நகர்வதையே காட்டுகிறது! என்று தினகரனிடம் வேறு சில நிர்வாகிகள் கொளுத்திப் போட்டுள்ளனர். தங்கமும் போய்விட்டால், கட்சியின் நிலைமை தகரமாகிவிடுமே! என்று ஏக கவலையில் ஆழ்ந்துவிட்டாராம் தினகரன். ஹும்! திடீர் எழுச்சியும், திடீர் சரிவும் அரசியலில் சாதாரணம்தானே!

click me!