ஆட்சி கலையாமல் முழுமையாக உங்கள் பதவியை காப்பற்றிக்கொள்ள வேண்டுமேன்றால் என்றால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தினகரன் யோசனை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டிய தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தினகரனுக்கு கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். தினகரன் பதவியேற்பின்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேர் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது; எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் மனதளவில் எங்கள் பக்கம் உள்ளனர். ஆர்கே நகர் தோல்வி பதற்றத்தால் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நிர்வாகிகளை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பதவிக்காக 5 அல்லது 6 பேரின் சுயநலத்துக்கு துணை போக வேண்டாம். ஆட்சி கலையாமல் முழுமையாக உங்கள் பதவியை காப்பற்றிக்கொள்ள வேண்டுமேன்றால் என்றால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தினகரன் யோசனை தெரிவித்தார்.
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்துவிட்டு மேலே ஏறிய, இந்த துரோகிகளின் ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கவிழ்ந்து விடும். கட்டாயம் கவிழ்த்து விடுவேன், ஆட்சி கலையாமல் இருக்க எங்கள் பக்கம் வந்துவிடுங்கள். ஸ்லீப்பர் செல்கள் சட்டசபை வாக்கெடுப்பின் போது வெளியே வருவர்.
தொடர்ந்து பேசிய தினகரன், சின்னம்மா தலைமையில் செயல்படுவதுதான் உண்மையான அதிமுக. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். வருங்காலத்தில் சரித்திரத்தில் நல்ல பெயரை எடுக்க பாருங்கள். கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தியவர்களே மற்றவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல், எதை எதையோ செய்கிறார்கள். சரித்திரத்தில் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்யுங்கள். இனியும் திருந்தவில்லை என்றால், எதிர்காலத்தில் துரோகத்திற்கான எம்பளம் என்று ஒன்று உருவாக்கினால், அதில் உங்களது இருக்கும் என எச்சரித்தார்.