தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டுக்கு செல்லும்போது தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்காமல் ஏன் சென்றார் என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மற்றவர்கள் யாரையும் அவர் நம்ப மாட்டார் என்றும் அவர்கள் மீது உள்ள பயத்தினால்தான் எடப்பாடி இப்படி நடந்து கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திண்டுக்கல்லுக்கு வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சரின் வெளிநாடு பயணம் தமிழகத்திற்கு முதலீட்டை அதிகபடுத்தினால் நல்லது. அது தவறு இல்லை. ஆனால் இது அரசியலாக இருக்க கூடாது. ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது என தெரிவித்தார்..
ஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது. அவிழ்த்து விட்டால் அது நெல்லிக்காய் மூட்டையாக மாறிவிடும் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனது வெளிநாட்டு பயணத்தின் போது பொறுப்புக்களை ஒப்படைக்காமல் சென்றது அவரது பயத்தினால் தான். அவரது கட்சியினர் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது என கிண்டல் செய்தார்.
அமமுக கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம். அப்படி ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் அரசாங்கத்தை மீறி காவல்துறை தனது பணியை செய்யவேண்டும். அவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என கூறினார்.
ஏப்ரல்-மே மாதங்களில் தான் குடி மராமத்து பணிகளை செய்திருக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட பின்பு குடி மராமத்து பணி நடப்பது என்பது சாத்தியமில்லாதது. இந்தியாவின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செயல்பட வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும். காஷ்மீரை மீட்க அதுபோல் கச்சத் தீவையும் மீட்டால் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தினகரன் கூறினார்.