மேலும், ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், அதை நடத்துநரிடன் கொடுத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் கட்டாயம் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நாளுக்கு நாள் பேருந்து விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டே பேருந்துகளை இயக்குவதே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் என்பது பலகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒரு பேருந்தில் அந்த பேருந்தின் ஓட்டுனரை நம்பியே மக்கள் அதில் ஏறி பயணிக்கின்றனர். ஆனால் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய ஓட்டுனர்கள் பலர் அசட்டையாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பேருந்துகள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே முற்றிலும் இதை தடுக்க பேருந்தில் பணியில் இருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பணியிலிருக்கும் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தங்களது உரிமத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வின் பொழுது காண்பிக்க உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், பெயர், பணி எண் உடன் கூடிய வில்லை ( ID Card ) அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், அதை நடத்துநரிடன் கொடுத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களே பொறுப்பாவார்கள் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.