விவசாயிகள் திருடர்களா.??? தலைவரான கையோடு பிடிஆரை வம்பு இழுக்கும் அண்ணாமலை.. அதிரடி அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 8:14 AM IST
Highlights

இதனால் பாதிக்கப்பட்ட இந்த பகுதி விவசாயிகள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர். கடந்த ஜூலை 8ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதியில்லாமல் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

மண்ணோடும் மழையோடு போராடும் விவசாயிகள் திருடர்களா? என கேள்வி எழுப்பி தமிழக நிதியமைச்சருக்கு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு: தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும், முல்லைப் பெரியாற்று பகுதியிலும் உழவுத்தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் போர் அல்லது கிணறு அமைத்து மின்சார பம்புசெட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அனுமதி இல்லாமல் ஆற்றுநீர்  திருடப்படுவதாக கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட இந்த பகுதி விவசாயிகள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர். கடந்த ஜூலை 8ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதியில்லாமல் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். விளைச்சல் இல்லாமல் மன உளைச்சலில் சிரமப்படும் விவசாயிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக திருடர்கள் என்று நாக்கூசாமல் கூறுவது கண்டிக்கத்தக்கது.உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதி அமைச்சர் திருடர்கள் பட்டம் கொடுத்துள்ளார். விவசாயிகள் நீரை எடுத்துச் சென்று உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குளிர்பானம் தயாரிப்பு அல்லது குடிநீர் புட்டி தயாரிப்பு தொழிலுக்கு பயன்படுத்தவில்லை.

விவசாயிகள் தங்கள் வயலில் இருக்கும் கிணறு போர்வெல்லில் இருந்து தண்ணீரை குழாய் மூலம் தொலைவில் உள்ள தங்களுடைய தோட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது என மாண்புமிகு நிதியமைச்சர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு  ஆற்றில் வாய்க்காலில் இருந்து முறைகேடாக எடுத்தவர்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது இதுவரை தண்ணீர் பைப் லைன் மூலம் விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தாலும் கூட இனிமேல் அப்படி  எடுத்துச் செல்ல முடியுமா என்பது அதிகாரிகளுக்கே விளங்கவில்லை. ஆகவே தமிழக நிதி அமைச்சரின் தடாலடி உத்தரவினால், வயல், ஆற்றுக்கு, வாய்க்கால் அருகிலிருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் அனைத்து விவசாயிகளும் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக விவசாயிகளையும், விவசாய உற்பத்தி பொருட்களையும் பாதிக்கும் நிதியமைச்சரின்  இந்த நடவடிக்கையை முதல்வர் தடுத்து நிறுத்தி ஏழை விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நீர் ஆதாரம் வேண்டும் என்று தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே முதலமைச்சர் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!