
மேலூர் நகராட்சியில் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி இஸ்லாமிய பெண்ணிடம் பாஜக பூத் ஏஜெண்ட் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு சிறது நேரம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டுகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறு தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைதொடர்ந்து, சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜெண்டை வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.