அண்ணாமலை இதை பிரதமர் மோடி கிட்ட கேளுங்க.. திமுகவை குறை சொல்லாதீங்க.! கொந்தளித்த கே.எஸ் அழகிரி

By Raghupati RFirst Published Dec 8, 2022, 5:06 PM IST
Highlights

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இடமும் வேலையும் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி. அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அத்திக்கடவு திட்ட மூலம் தரிசு நிலங்கள் கைப்பற்றி வருகிறது. இது கார்ப்பரேட் அரசு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, அவிநாசி அத்திக்கடவு திட்டம் தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்சாலைகளுக்காக அளிக்கின்றது. நிலங்களை கையகப்படுத்துவது என்பது எவ்வாறு கையகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கிற வழிகாட்டுதலின்படி மாநில அரசு செயல்படுகிறது. எனவே குறைபாடுகள் இருந்தால் அண்ணாமலை, மோடியிடம் தான் கேட்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.  இதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். கலைஞரும் ஒரு காரணம். மற்றவர்கள் அதை உரிமை கொண்டாடுகிற தகுதியே கிடையாது. தேசத்தில் ஏழு ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளை உலக அளவில் வளர்த்திருப்பது மோடி அரசாங்கம் தான். மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே துறை இருந்தது. இப்பொழுது இரண்டும் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்கள். இன்றைக்கு இதையெல்லாம் தனியாருக்கு தாரைவார்த்தது மோடி அரசுதான்.

இதையும் படிங்க.. Himachal Pradesh Election Results: இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைகிறதா.? பாஜக Vs காங்கிரஸ் பிளான்.!!

பிஎஸ்என்எல் நிறுவனத்தை சாகடித்து அம்பானி கொண்டு வந்த ஜியோ என்ற பெயரை நிறுவி இருக்கிறார். அதேபோன்று ரயில்வேயை பணக்காரர்களுக்கு, ரயில் பெட்டிகளை மட்டுமல்ல ரயில்வே நிலையங்களை கூட பொதுவுடமையில் இருந்து தனி உடைமையாக ஆக்கியிருக்கிறார் என குற்றஞ்சாட்டினார். இதை எல்லாம் வட இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு, குறிப்பாக குஜராத் கார்ப்பரேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.

அண்ணாமலை போன்றவர்கள் மோடியை தான் குறை சொல்ல வேண்டும், திமுகவை குறை சொல்வது அவசியம் இல்லை . என்எல்சி-க்கு நிலம் கையகப்படுத்துவது தவறு ஒன்றும் இல்லை. பொதுமக்களை பாதிக்காதவாறு அவர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும். நெய்வேலி விஷயத்தில் பலமுறை பேசி இருக்கின்றேன், நிலம் கையகப்படுத்துவதில் தவறில்லை.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு அவர் விரும்புகின்ற இடத்தில் தண்ணீர் வசதியோடு அந்த நிலத்தை பெறுகிற வாய்ப்பை ஏற்படுத்தினால் அக்குடும்பம் சிறப்பாக வாழும். நாட்டு நன்மைக்காக நிலத்தை கொடுக்க சொல்லிவிட்டு குறைந்தபட்ச பணம் வழங்குவது என்பது நியாயமற்றது. இதனால் என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இடத்தில் விரும்புகிற இடத்தில் மாற்று இடத்தை வழங்க வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஒரு வேலையும் தர வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க.. இமாச்சலை தட்டி தூக்கிய காங்கிரஸ்.! பாஜக கையில் எடுத்த கடைசி அஸ்திரம் - ஆட்சி அமைப்பது யார் ?

click me!