எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு திமுக அரசு தான் காரணம் என அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஆட்சி தொடர நான் முக்கிய காரணம் என்பதால் திமுகவிற்கும், திமுக தலைவருக்கும் என்மீது கோபம், அதனால்தான் இந்த பழிவாங்கும் செயல் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை எம்.எல்.ஏ விடுதியில் வேலுமணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள், வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 12 மணி நேர சோதனையின் முடிவில் ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.
அப்போது எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு திமுக அரசு தான் காரணம் என அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, ‘’ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி தொடர நான் முக்கிய காரணம் என்பதால் திமுகவுக்கு என் மீது கோபம். அதனால் தான் ரெய்டு நடத்தியுள்ளது. என் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியது தவறு. என் வீட்டிலும் எனது உறவினர் வீட்டிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். மக்கள் என் பக்கம் உள்ளார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.