
தமிழக அரசியல் நிலவரம் கலவரமாக உள்ள நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ஹாட் ஸ்பீச்சுகள் மக்களின் நாடித் துடிப்பை தாறுமாறாக எகிறச் செய்து வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா..! இணையாதா என்பதே..! இதுவரை மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. ஆனால் இதனையெல்லாம் தூக்கி அடித்திருக்கிறார் ரஜினிகாந்த். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர் தனது ரசிகர்களைச் சந்தித்து வருகிறார்.
முதல் நாள் தொடங்கி இன்று வரை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகள் அனைத்திலும் அத்தனை காரம்... எடப்பாடி தலைமையிலான தமிழக அரசை மறைமுக விமர்சித்த ரஜினி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை பாராட்டத் தவறவில்லை.
இத்தனையும் பேசிய ரஜினி, தமிழக பா.ஜ.க. தலைவர்களை மட்டும் செலக்டிவ் அம்னீசியாவாகக் கருதி தவிர்த்து விட்டார். மு.க.ஸ்டாலினை எப்படி பாராட்டலாம் என்று எதிர்விணையாற்றிய தமிழிசை , ரஜினி அரசியலில் நுழைந்தால் அதனை வரவேற்கிறேன் என்று கூறி ஜகா வாங்கிவிட்டார்.
சிறந்த ஆட்சியாளர் என்று நடிகர் ரஜினிகாந்த் தம்மை கூறியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று திமுக செயல்தலைவர் பெருந்தன்மை காட்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனோ ஒருபடி மேலே சென்று ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று அதிரச் செய்துள்ளார்.
ஒருவேளை நாளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கூட்டணிக்கு அட்சாரம் போடும் வகையில் தொல்.திருமாவளவன் இப்படி பேசியிருக்கலாம் என்கின்றனர் உள்விவரமறிந்தவர்கள்.