
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொழிலாளர்களுடன் 5கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை ஆரம்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து போக்குவரத்து தொழிலார்கள் வேலைநிறுத்தம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலார்களின் வேலை நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
போராட்டம் நாட்கணக்கில் நீடித்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். நாட்களை கடத்தாமல் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.