இந்தியாவில் ஜனநாயக சக்திகளின் குரல்வலைகள் நசுக்கப்படுகிறது.!! மத்திய அரசை பங்கம் செய்த அன்சாரி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2020, 3:40 PM IST
Highlights

இன்று இந்திய திருநாடு சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகளில், ஜனநாயக சக்திகளோடு இணைந்து களமாட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம்.இந்தியாவுடைய ஜனநாயக சக்திகளின் குரல்வலையை டெல்லியில் இருக்கக்கூடிய பாசிஸ சக்திகள் நெறிக்கிறார்கள்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி மற்றும் புறாக்கிராமத்தில் மஜகவில் திரளான இளைஞர்களும், மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் மத்தியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார் அதன் முழு விவரம்:-

மக்களுடைய பிரச்சினைகளை அறிக்கைகள்  வாயிலாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற முதல் ஐந்து கட்சிகள் வரிசைப்படுத்தினால், அந்த முதல் ஐந்து கட்சிகளிலே மனிதநேய ஜனநாயக கட்சியும் பிரதானது என்பதை இந்த நேரத்திலே உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 5 மாதங்களில் தமிழகம் முழுக்க புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நம் கட்சியில் இணைந்து உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது நம்மை போன்ற வளரும் கட்சிகளுக்கு பெரிய எண்ணிக்கையாகும். இது நம் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. நமது பணிகளும் அவ்வாறு இருக்கிறது. பொதுவாக  மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை அறிக்கைகள் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு  எடுத்துச் சென்று மக்களுடைய குரலை பிரதிபலிப்பது என்ற வகையிலே மனிதநேய ஜனநாயக கட்சி தனித்த ஒரு முத்திரையை களத்திலும், சட்டமன்றத்திலும் பதித்திருக்கிறது.

மற்ற அரசியல் கட்சிகளின்  அணுகுமுறைகளிலிருந்து  மனிதநேய ஜனநாயக கட்சியுடைய அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில்  தமிழ்நாட்டிலே அமைதி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய எல்லா மக்கள் மத்தியிலும் சுமூகமான உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். சமூகநீதி பாதுகாக்கப்படவேண்டும். மக்களுடைய வாழ்வாதாரங்கள் அது சார்ந்த குறைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பரந்துபட்ட ஜனநாயக அரசியலை மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்து வருகிறது.இன்று இந்திய திருநாடு சந்திக்கக்கூடிய பல பிரச்சினைகளில், ஜனநாயக சக்திகளோடு இணைந்து களமாட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். இந்தியாவுடைய ஜனநாயக சக்திகளின் குரல்வலையை டெல்லியில் இருக்கக்கூடிய பாசிஸ சக்திகள் நெறிக்கிறார்கள்.  மாநிலங்களுடைய உரிமைகளை பறிக்கிறார்கள். சாதாரண ஏழை எளிய மக்களுடைய கல்வி உரிமைகள் பறிபோகிறது. 

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே விளிம்புநிலை மக்கள், கிராமப்புற மக்கள், சாமானிய குடும்பத்துப் பிள்ளைகள் உயர் கல்வியை நோக்கி செல்ல விடாத ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதன் மூலமாக எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்து போகச் செய்ய வைப்பது தான் அவர்களது உள்நோக்கமாக இருக்கிறது.அதே போன்று இயற்கை வளங்களை கொள்ளையடிக்க.., கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க.., அவர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை கொண்டு வந்திருக்கிறார்கள்.இப்படி மக்களுடைய அடிப்படை உரிமைகள் எல்லாம் பறிக்க கூடிய வேலைகளை செய்து இந்தியாவுடைய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கக் கூடிய வேலைகளை செய்து வருகிறார்கள். மக்களுக்கு மத்தியிலே திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கி இரத்த ஆறுகளை ஓடவிட்டு தங்களுடைய அரசியல் அரியணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மோசமான காலகட்டத்தில் நாடு இருந்து கொண்டிருக்கும் நிலையில்தான், கொரோனா தொற்று உலகையே ஊரடங்கில் வைத்து நம்முடைய நாட்டிலும்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மக்கள் பரிதவிப்பில் இருக்கிறார்கள். மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்த பரிதவிப்பையும், அச்சத்தையும் மத்திய பாஜக அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது. மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் மக்கள் ஊரடங்கில் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், மக்கள் நோயின் அச்சத்திலிருக்கக்கூடிய  பதட்டமான ஒரு சூழலிலே ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் செயல்படுத்த துடித்து கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் தான் மனிதநேய ஜனநாயக கட்சி, தேர்தல் அரசியலை எல்லாம் கடந்து ஜனநாயக சக்திகளை எல்லாம் ஒன்றிணைத்து மக்களுடைய உரிமைகளுக்காக  குரல் கொடுக்கக்கூடிய சித்தாந்த பணிகளை முன்னெடுத்து கொண்டுள்ளது.இத்தருணத்தில் நீங்கள் எல்லோரும் மஜகவில் இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு சேவையாற்ற  பொறுப்புகள் வழங்கப்படும். பொறுப்பு என்பது கடைமையாற்றுவதற்கான கருவி மட்டுமே. என அவர் கூறினார். 
 

click me!