
திமுக தலைமையிலான அரசு வேலியே பயிரை மேயும் கதையாக செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது என்று சசிகலா குற்றம் சாட்டியிருக்கிறார்.
திமுக மீது அதிமுக புகார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவினர் இடையூறு செய்ததாகப் புகார் எழுந்தது. இ ந் நிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலிலும் திமுகவினர் இடையூறு செய்வதாக அதிமுகவினர் புகார் கூறினர். இந்நிலையில் இதுதொடர்பாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோவை மாவட்டம் வெள்ளளூர் பேரூராட்சியில் ஏற்கனவே கடந்த நான்காம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவினர் இடையூறு செய்து நடத்தவிடாமல், தற்போது மீண்டும் இன்று நடைபெறுகின்ற சூழலில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு, கழகத்தினரை அச்சுறுத்தி தேர்தைலை சீர்குலைக்கும் வகையில், செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
திமுகவுக்கு கண்டனம்
வெள்ளளூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் மறைமுகத் தேர்தலில் கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், திமுகவினர் இதுபோன்ற தில்லுமுல்லுகளை அரங்கேற்றி முறைகேடாகப் பேரூராட்சியை தாங்கள் அபகரித்து விடலாம் என்று எண்ணி, மறைமுகத் தேர்தலை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதை யாருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதே போன்று, மதுரை, கரூர், தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும், மறைமுக தேர்தலை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. தமிழக காவல்துறையினரும், பாரபட்சம் பார்க்காமல், அனைவருக்கும் பாதுகாப்பு அளித்து நியாயமான முறையில் மறைமுகத் தேர்தலை நடத்திட வழிவகை செய்திட வேண்டும்.
சசிகலா கோபம்
தமிழக மக்கள், திமுகவினரின் அடக்குமுறையையும், அராஜகப் போக்கையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தலைமையிலான அரசு வேலியே பயிரை மேயும் கதையாக செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இவற்றுக்கெல்லாம் திமுகவினர் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.