வெளிநாடுகளிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.!! அன்சாரி எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2020, 4:32 PM IST
Highlights

அந்த மாடுகளிடம், திமில் மற்றும் வியர்வை நாளங்கள் இல்லாததால், அதன் வெப்பம் மற்றும் பால், சிறுநீர் வழியாகவே வெளியேறும் என்றும், அவற்றின் சாணமும், சிறுநீரும் நம் விவசாய நிலத்திற்கு பயனற்றவை என்றும் கூறப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என மனித நேய ஜனநாயகக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் திட்டத்துடன், மாடுகளிடையே இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட கலப்பின காளைகள் மற்றும் பசுக்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இறக்குமதி செய்து வருகிறது. 

அந்த வகையில்  சமீபத்தில்  ஜெர்மனியிலிருந்து 105 ஜெர்சி ரக  காளைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.இந்த வகையான கால்நடைகள் ஐரோப்பிய மரபணுக்களுக்கும், பருவ காலத்திற்கும் ஏற்றவை. இறைச்சிக்காகவும், அதிக பால் உற்பத்திக்காகவும் மரபணு மாற்றங்களுடன் செயற்கை வழியில் உருவாக்கப்படுபவை.இந்த ரக மாடுகள் வெப்ப மண்டல பகுதிகளுக்கு ஏற்றவை அல்ல. இவை தமிழக மக்களின் உடல் நலத்திற்கும், தமிழகத்தின் தட்பவெப்ப நிலைகளுக்கும் பொருத்தமற்றவையாகும். குளிர்பிரதேசங்களை சேர்ந்த அந்த மாடுகளிடம், திமில் மற்றும் வியர்வை நாளங்கள் இல்லாததால், அதன் வெப்பம் மற்றும் பால், சிறுநீர் வழியாகவே வெளியேறும் என்றும், அவற்றின் சாணமும், சிறுநீரும் நம் விவசாய நிலத்திற்கு பயனற்றவை என்றும் கூறப்படுகிறது. 

அதிகமான பால் உற்பத்தி என்ற பெயரில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்வது போன்ற இந்த ரக மாடுகளை, நமது ரக மாடுகளுடன் கலப்பினம் செய்வதால் ஏற்படும் சாதக, பாதகங்களை சற்று நிதானமாக யோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். நமது நாட்டின் பாரம்பரிய மாடு இனங்கள் அழிவதற்கு இது வழிவகுத்து விடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை தேவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். இதில் விவசாயிகள் வாழ்வாதாரம், மக்களின் அன்றாட தேவை, சந்திகளின் ஆரோக்கியம், பாரம்பரிய கால்நடைகளின்  பாதுகாப்பு ஆகியவையும் அடங்கியுள்ளது. இதற்கு மாற்றாக நம் மண்ணின் மரபுகளுக்கேற்ற கால்நடைகளிலிருந்து அதிகமான பால் உற்பத்தியை எவ்வாறு செய்வது என்பது குறித்த ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்துவதும், நமது மாடு இனங்களை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து திட்டமிடுவதும், நமது நாட்டு ரக மாடுகளின் மூலம் பால் உற்பத்தியில் ஏற்றுமதி நிலையை அடைவது குறித்தும் அதற்கான முன் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 

ஏற்கனவே பாலில் நடைபெறும் கலப்படம் காரணமாக ஒவ்வாமை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களிடம்  அதிகரித்து வரும் நிலையில், நமது மண்ணுக்கும், மரபுக்கும் ஒத்து வராத குளிர் பிரதேசத்து மாடுகளின் கலப்பினம் மூலம் உற்பத்தியாகும் பாலின் ஆரோக்கியம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த ரக காளைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இதன் சாதக பாதங்கள் குறித்து ஆராய குழு அமைப்பது குறித்து யோசிக்க வேண்டும்  எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 

click me!