மேலும் எல்.ஐ.சி யை தனியாருக்கு விற்பது தேசத்துரோகம், நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் எல்.ஐ.சி - யை தனியாருக்கு விற்பதை கைவிடவேண்டும் என வலியுறுத்தினர்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி மூலதனத்தை 74 சதவீதம் ஆக உயர்த்துவதை கண்டித்து, எல்.ஐ.சி ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட ஆவணம் செய்ய வேண்டும், 20 சதவீதம் குறையாமல் ஊதியத்தை உயர்த்தி உடனே வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதம் ஆக உயர்த்த கூடாது, மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம், மற்றும் எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசினை கண்டிக்கிறோம் என முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் எல்.ஐ.சி யை தனியாருக்கு விற்பது தேசத்துரோகம், நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் எல்.ஐ.சி - யை தனியாருக்கு விற்பதை கைவிடவேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், அகில இந்திய எல்.ஐ.சி ஊழியர் சம்மேளனம் சார்பில் ரமேஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர், மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய பட்ஜெட்டில், எல்.ஐ.சி தனியார் மயமாக்குவது, அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதம் ஆக உயர்த்துவதாக தெரிவித்து உள்ளது.
இந்த இரண்டையும் மத்திய அரசு கைவிட வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும், மக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அரசை எச்சரிக்கும் வகையில் அகில இந்திய அளவில் எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.