உடனே தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்: எடப்பாடியாருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2020, 2:45 PM IST
Highlights

ஆகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்  வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்றம் இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின்  முழு விவரம் பின்வருமாறு:- 

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2009 விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் சட்டம் 2020,  அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்  2020, ஆகிய வேளாண் சட்டங்கள் மூன்றையும் நாடாளுமன்றம் இயற்றியிருப்பது,  நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பாக தமிழக விவசாயிகள் மத்தியிலும் மிகப் பெரிய  அதிருப்தி, எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் இச்சட்டங்களை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். நாட்டின் முதுகெலும்பு என்றால், விவசாயிகள் நம் மாநிலத்தின் உயிரோட்டமானதும், விலைமதிப்பற்றதுமான அறிய சொத்துக்கள். அவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் கடமை உணர்ச்சி உள்ள மாநில அரசு மட்டுமே  அவர்களின் பாதுகாவலனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் காலங்காலமாக இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்றி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுதான் உறுதி செய்து வருகிறது. 

அரசமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இருக்கும் வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது. அதேபோல் நிலம், நிலம் சார்ந்த சுவாதீன உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியலில் 18-ல் இருக்கிறது. இவைத்தவிர மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் 46, 47, 48 ஆகியவற்றை மொத்தமாகவும் ஒன்றோடு ஒன்றும் இணைத்து படித்துப் பார்த்தால் வேளாண்மையைப் பொருத்தமட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து, மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதை நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் இயலாது. அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி  தத்துவத்தில் சாரத்தை மனதிலே கொண்டுதான் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஆகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்  வலியுறுத்துகிறேன். விவசாயிகளுக்கு கடுமையான நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தும் இச்சட்டங்கள் குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாக தமிழ்நாடு  சட்டமன்றத்தை கூட்ட பரிந்துரை செய்யுமாறும், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020 உள்ளிட்ட இம்மூன்று சட்டங்களுக்கும் எதிராக தமிழ்நாடு அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் தமிழக வேளாண்மை மற்றும் விவசாய பெருமக்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் மிக மிக அவசரமும் அவசியமும் ஆகும் என்பதை அனைவரும்  உணர்ந்திட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!