பாஜக மற்றும் அதற்கு துணை போகும் சக்திகள் மீது தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர்..!! கி. வீரமணி அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 7, 2020, 4:13 PM IST
Highlights

தமிழ்நாட்டு மக்களின் இந்த எதிர்ப்புணர்வைத் திசை திருப்பிட, தமிழக பி.ஜே.பி. ‘சித்து வேலைகளில்’ ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் மயங்கக் கூடியவர்கள் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மக்கள் அல்ல என்று எச்சரிக்கிறோம் 

திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு முழுக்க முழுக்க ஹிந்தியில் மத்திய அரசுத் துறை பதில் எழுதியதற்குக் கண்டனம் தெரிவித்தும், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க 1938அய் போல மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் ‘ஹிந்துத்துவா’ நிகழ்ச்சி நிரலில், கல்வி, கல்வியைச் சார்ந்து ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட இன்னோரன்ன வகையில் எல்லாம் திணிப்பு வேலை வெகுவேகமாக நடந்துவருகிறது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே இவற்றிற்கெல்லாம் முதல் எதிர்ப்புக் கொடியைத் தூக்குவது - தந்தை பெரியார் பிறந்த - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் வேரூன்றிய தமிழ்நாடுதான்.தேசியக் கல்வி என்று சொல்லி, மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதத் திணிப்பு ஒருபுறம். எந்த அளவுக்கு ஹிந்தித் திணிப்பு கோர உருவம் எடுத்திருக்கிறது என்றால், ‘ஹிந்தி தெரியாது என்றால், வங்கிக் கடன் கிடையாது’ என்று சொல்லும் அளவுக்கு ஹிந்தித் திணிப்பின் வெப்பம் கதிர் வீச்சாக இருக்கிறது. 

விமான நிலையத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்து (கவிஞர் கனிமொழி) ‘ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?’என்று ஒரு சாதாரணப் பணியாளர் கேட்கும் அளவுக்கு இந்தித் திணிப்பு வெறியாகி விட்டது. மத்திய சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வில் ‘ஹிந்தி’யில் தனி ஒரு தேர்வாம் (Paper). இதுபோல ஏராளம் உண்டு; எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு. முழுக்க முழுக்க இந்தியிலேயே கடிதமா? வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் நாள் கடிதத்தில் தகவல் ஒன்றைக் கேட்டுள்ளார்.ஆயுர்வேதா, சித்தா, யுனானி துறைகளுக்குத் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதுதான் கேட்கப்பட்ட தகவலாகும். மத்திய சுகாதாரத் துறை அக்டோபர் 27 ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளது. 

ஆங்கிலத்தில் அல்ல - அப்பட்டமாக ஹிந்தியில்தான் பதில் கடிதம் அமைந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட தகவல், ஆங்கிலத்தில்தான் - ஆனால், பதில் அளிக்கப்பட்டதோ முழுக்க முழுக்க ஹிந்தியில்தான். மத்திய பா.ஜ.க. ஆட்சி- அதற்குத் துணை போகும் சக்திகள்மீது ஏற்கெனவே தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புத் தீயில் மேலும் மேலும் எண்ணெய்க் கொப்பரையைக் கவிழ்த்துக் கொட்டி உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களின் இந்த எதிர்ப்புணர்வைத் திசை திருப்பிட, தமிழக பி.ஜே.பி. ‘சித்து வேலைகளில்’ ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் மயங்கக் கூடியவர்கள் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மக்கள் அல்ல என்று எச்சரிக்கிறோம்! பல மொழிகள் உள்ள பரந்த இந்திய நாட்டில், பன்மொழிகள், பன் மதங்கள், பல கலாச்சாரங்கள் என்ற பன்முகத் தன்மையையே பெருமையாகப் பேசும் (Pluralistic Culture) ஒரு நாட்டில் - அதன் அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இந்திய மொழிகள் 22 என்று அங்கீகரித்துள்ள நிலையில், 

ஆட்சி மொழியாக ஹிந்தி நடைமுறைக்கு வந்த பிறகும்கூட, ஹிந்தி பேசாத மக்கள் விரும்புவரை ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற உறுதிமொழி அடிப்படையில், ஆட்சி மொழிச் சட்டம், மற்ற மொழி பேசும் மக்களுக்குக் கொடுத்துள்ள உறுதிமொழிப்படியும் உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, ஆங்கிலத்தில்தானே அந்த அமைச்சகம் பதில் தந்திருக்கவேண்டும்? எதற்காக முற்றிலும் ஹிந்தியில் பதில்? அதன்மூலம் கேள்வி கேட்டு பெறவேண்டிய தகவல்கள் பற்றிய நோக்கம் நிறைவேறுமா? நியாய உணர்வோடும், நடுநிலையோடும் உள்ளவர்கள் பதில் அளிக்கவேண்டும்? ஹிந்தியில் பதில் அளித்திருப்பது கண்டனத்திற்குரியதல்லவா? ஹிந்தித் திணிப்பு வெறும் வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல; பண்பாட்டு கலாச்சாரத் திணிப்பும் ஆகும்! நமது தமிழ்நாட்டு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக எடுத்து, மத்திய அரசை வற்புறுத்திட முன்வரவேண்டும். 

தமிழ்நாட்டு மேடைகளிலும் இந்த ஹிந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என்ற பண்பாட்டுப் படையெடுப்பைப்பற்றி தமிழ் மக்களிடையே பெரும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வேகமாக முடுக்கிவிட வேண்டியது அவசர, அவசியம்! மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கவேண்டும் பண்பாட்டுப் படையெடுப்புதான் படையெடுப்புகளிலேயே மிகப்பெரிய ஆபத்தானது என்பதை மக்களுக்கு 1938 அய்போல புரிய வைக்க மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கவேண்டும்! என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!