
உள்ளாட்சித் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி வெற்றிபெற்று இரட்டை இலையை மீட்போம் என்றும், அதிமுகவை கைப்பற்றுவதற்கான ஒரே வழி புதுக்கட்சி தொடங்குவதுதான் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
தேனியில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தங்க தமிழ்செல்வன், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்றும், அனைவரும் தினகரனுடன் சட்டசபைக்குள் செல்வோம் என்றும் தெரிவித்தார்.
பேருந்து கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் அமைச்சர்களை பொதுமக்கள் விரட்டியடிப்பர் என்று தெரிவித்த தங்க தமிழ்செல்வன், .புது கட்சி தொடங்க தினகரன் தயாராகி வருவதாக கூறினார்.
மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் என்றும் தங்க தமிழ்செல்வன் கூறினார்..
தேனியில் விண்ணப்பத்தை பெற்று ஜெ., பிறந்தநாள் அன்று புதிய கிளை நிர்வாகிகள் பெயர்கள் வெளியிடப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம். அதுவரைக்கும் தான் இந்த புதிய கட்சித் திட்டம், என்றும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்