பாஜகவை அல்லு தெறிக்கவிடும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.. திமுகவுக்கு பயங்கர சப்போர்ட்.. ஆட்டம் ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2021, 10:58 AM IST
Highlights

உலகம் முழுக்க தமிழ் மொழி கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில் நீட்தேர்வு தமிழ் மொழிக் கல்விக்கு எதிரான மனநிலையை வளர்க்கிறது. நகர்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர் கொல்லி தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல இந்தியாவில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும்

"சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

நீட் ஒரு உயிர்க்கொல்லி தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கை,  நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த தேர்வின்  தீவிளைவுகளை பட்டியலிடுகிறது. அதன்படி கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவ படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14. 44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. இது சமூகத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளி விவரமே போதுமானது. 

நீட் தேர்வுக்கு பிறகு, எம்பிபிஎஸ் படிப்பில் சிபிஎஸ்இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள் தான் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளனர். நீட் தேர்வில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களில் 90 சதவீதம் தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள், நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம் தான் என்பது  நான் ஆரம்பம் முதலே சொல்லி வரும் ஒன்று. இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன. நாட்டிலேயே சிறந்த மருத்துவர் கட்டமைப்பை கொண்டிருப்பது தமிழகம். இந்த தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு சிதையும், நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமிழ்வழியில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. 

உலகம் முழுக்க தமிழ் மொழி கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில் நீட்தேர்வு தமிழ் மொழிக் கல்விக்கு எதிரான மனநிலையை வளர்க்கிறது. நகர்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர் கொல்லி தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல இந்தியாவில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும், உண்மைகளை வெளிக் கொணர்ந்து சட்ட போராட்டத்திற்கான வழிகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மையம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இக் குழுவின் பரிந்துரைகளின் படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!