
திமுக எம்.பி. கனிமொழியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில், திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி, திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல்? என கூறியுள்ளார். இது 150 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது.
ஒரு பொறுப்புள்ள ராஜ்யசபா உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. நமது அண்டை மாநிலங்களில் வாழும், குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திட வாய்ப்புள்ளது.
எனவே உலகமெங்கும் வாழும் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள திமக ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.