மத்திய அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்: ஒரு குற்றவாளி கூட தப்பிக்கக்கூடாது. திருமாவளவன் ஆதங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2020, 4:21 PM IST
Highlights

சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிறது ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல, அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை தகர்ப்பதாக இருக்கிறது.  சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே இதற்கு காரணம். எனவே மத்திய அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்பதை உறுதி செய்திருந்தது. எனவே அந்த குற்றத்தை இழைத்த குற்றவாளிகள் அதற்கான சதித் திட்டத்தைத் தீட்டியவர்கள் அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. தங்களுக்கு எதிரானது என்று கருதினாலும் கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய  தரப்பினரும் பாபர் மசூதி இடித்த வழக்கில் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால் அனைவருடைய நம்பிக்கைக்கும் மாறாக இந்த தீர்ப்பு அமைந்திருப்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. 

இந்த வழக்கில் சதி திட்டம் எதுவும் இல்லை என அலகாபாத் உயர் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தபோது, அதற்கு எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இதில் சதித்திட்டம் இருக்கிறது எனவே சிறப்பு நீதிமன்றம் அதை விசாரிக்க வேண்டும் என 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆணையிட்டது. அதுமட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 142 தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ரேபரேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த வழக்கையும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவையற்ற காலதாமதத்தை செய்துகொண்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் தான் அவ்வப்போது சிபிஐ வழக்கை விரைவுபடுத்தி கொண்டிருந்தது. அப்படி உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தும் கூட இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இப்படி ஒரு அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிறது ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல, அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வழக்கில் சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது. 

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் கூட வேண்டும் அங்கே இருக்கிற பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கற்களை எடுத்து வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு அன்றைய பாஜக தலைவர் எல்.கே அத்வானி ஆதரவு திரட்டியதை அனைவரும் அறிவோம். அதுபோலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்கு துண்டுகளாக இருந்தார்கள் என்பதற்கு ஊடகங்களிலேயே ஏராளமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்கள்  நம்பத்தக்கனவாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. நீதித்துறை மீதான நம்பிக்கை  தொடர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள், அது நாட்டின்  நல்லிணக்கமான சூழலுக்கு பேராபத்தாக மாறி விடும். எனவே இதை உணர்ந்து மத்திய அரசு வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று  விசிக சார்பில் வலியுறுத்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

click me!