மசூதியை இடித்தவர்கள் யார்? என்று உலகத்திற்கே தெரியும்..!! ஆதங்கத்தில் விம்மி வெடிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2020, 3:52 PM IST
Highlights

கடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது.

பாபர் மசூதி இடிப்பின் வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கிற்கான  தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரம் இல்லை என்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள், குற்றவாளிகள் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் கூட்டியே திட்டமிடவில்லை, சதி செய்யவில்லை என்று குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும். 

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை இது தகர்த்துள்ளது. பாபர் மசூதி இட வழக்கில் எவ்வாறு சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லையோ, அதுபோன்ற அடிப்படையில்தான்  இப்போதும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை இந்தியா மட்டுமல்ல! ஒட்டுமொத்த உலகமும்  பார்த்துக் கொண்டிருக்கின்றது.  பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடம் அதை இடித்தவர்களுக்கே  சொந்தமென்று சொன்னதும், அதை இடித்த குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளதும் தான் இந்திய நீதிமன்றத்தின் நீதியற்ற தீர்ப்புகளுக்கு உதாரணமாகும். பாபர் மசூதி நிலத்திற்கு உரிமை கோரும் ஆவணங்கள் இஸ்லாமியர்களிடத்திலேயே நிறைந்திருந்தாலும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் அதை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்ப்பளித்து ஒட்டுமொத்த இந்திய  மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது உச்சநீதிமன்றம். 

பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? என்று உலகத்திற்கே தெரிந்திருந்தும், மசூதி இடிப்பு குறித்து குற்றவாளிகள் பல்வேறு சுய வாக்குமூலங்கள் அளித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் திட்டமிட்டு மசூதியை இடிக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கும் நிலையிலும் கடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது. இந்தத் தீர்ப்புகள் மூலம் இந்திய நீதித்துறையின் இதயம் அழுகிவிட்டது . இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எப்போதுமே நம்பிக்கையாகவே இருந்து வந்தார்கள். ஆனால் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது. பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? என்பது உலகத்திற்கே தெரிந்திருந்தும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றங்கள் கூறுவது மிகப் பெரும் அநீதியாகும்.  

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானிக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஒருநாள் தண்டனை தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் குற்றவாளிகள் யார்? என்பதை உலகமே தெளிவாக அறிந்திருந்தும் கூட அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தையும், அரசியலைப்புச் சட்டத்தையும் சிதைத்து சீர்குலைத்து விட்டது.நீதிக்கு எதிராக, அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தொடர்ச்சியாக அமைந்து வருவது இந்தியாவில் நீதித்துறையின் மீதான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோசமான தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 

click me!