ஓபிஎஸ் முகாமை கரைக்கத் துடிக்கும் இபிஎஸ் தரப்பு.. கொத்து கொத்தாக அணி மாறிய வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!

By Asianet TamilFirst Published Jul 1, 2022, 8:30 AM IST
Highlights

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பெரும்பாலான நிர்வாகிகள் சாய்ந்துவிட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தை தீவிரமாக ஆதரிக்கும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் இபிஎஸ் முகாமுக்குத் தாவி வருகிறார்கள்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றிருந்தால், எடப்பாடி பழனிச்சாமிக்குப் பதில் அவர்தான் முதல்வராகியிருப்பார் என்று அதிமுகவில் சொல்லப்படுவதுண்டு. டெல்டாவில் அதிமுகவின் முகமாகப் பார்க்கப்படும் வைத்திலிங்கம், ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருக்கு எதிரான முகாமில்தான் இருந்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்தபோது இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதில் ஒரு பதவி ஓபிஎஸ் அணியிலிருந்த கே.பி. முனுசாமிக்கு வழங்கப்பட்டது. இன்னொரு பதவி இபிஎஸ் அணியிலிருந்த வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அதிமுகவில் வைத்திலிங்கத்துக்கு முக்கியத்துவம் உண்டு.

ஆனால், தற்போது ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், வைத்திலிங்கம் மட்டும் ஓபிஎஸ் கையைப் பற்றிக்கொண்டு உறுதியாக நிற்கிறார். முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் எல்லாம் இபிஎஸ் பக்கம் தாவி விட்ட நிலையில், இபிஎஸ் பக்கமிருந்த வைத்திலிங்கம் மட்டும் விடாப்பிடியாக ஓபிஎஸ் பக்கம் நிற்கிறார் வைத்திலிங்கம். அதற்கு சில காரணங்களை அதிமுகவில் சொல்கிறார்கள். அதிமுகவில் எஸ்.பி. வேலுமணிக்கும் அவருக்கும் ஆகாது என்றும், ஆனால், இபிஎஸ் அவருடன் நெருக்கமாக இருப்பதாவும் அவர் பேச்சைக் கேட்டு செயல்படுவதால், அதன் வெளிப்பாடாகத்தான் ஓபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் நிற்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அன்புள்ள அண்ணா... நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது.. ஓபிஎஸ்சை மெர்சல் ஆக்கிய இபிஎஸ்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் உறுதியாக இருப்பதை உணர்ந்துகொண்ட இபிஎஸ் தரப்பு, உடனடியாக தங்கள் வேலையைத் தஞ்சாவூரில் காட்ட ஆரம்பித்தது. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் எல்லோரும் இபிஎஸ் கூடாரத்துக்குள் கொண்டு வரும் பணியை இபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்களும் முன்னாள் அமைச்சர் காமராஜர் மூலம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதன்படி வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் முன்னாள் எம்எல்ஏக்கள் திருவையாறு ரத்தினசாமி, கும்பகோணம் ராம.ராமநாதன், பட்டுக்கோட்டை சி.வி.சேகர், பேராவூரணி கோவிந்தராஜன், தஞ்சாவூர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோர் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார்கள். 

இதையும் படிங்க: ஓபிஎஸ் என் பழைய நண்பர்.. பதவி கொடுத்த பிறகே இபிஎஸ்ஸின் சுயரூபம் தெரிந்தது.. கொட்டித் தீர்த்த டிடிவி தினகரன்!

மேலும் தஞ்சாவூரில் பெரும்பாலான ஒன்றிய செயலாளர்கள் இபிஎஸ் பக்கமே நிற்கிறார்கள். தன்னை மீறி எதுவும் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த வைத்திலிங்கம் இதனால் மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் வைத்திலிங்கத்தையே இபிஎஸ் முகாமுக்குக் கொண்டு வரும் வேலையும் தொடங்கியுள்ளதாக அதிமுகவில் பரபரப்பான தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர் வந்தால், மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட மேலும் சிலர் இபிஎஸ் பக்கம் வந்துவிடுவார்கள் என்று இபிஎஸ் தரப்பு கணக்குப் போடுவதாகவும் தெரிகிறது. ஜூலை 11-க்கு முன்பாக ஓபிஎஸ் முகாமை முழுவதுமாக கரைக்கவும் இபிஎஸ் தரப்பு காய்களை நகர்த்தி வருகிறது. இதில் வைத்திலிங்கம் சிக்குவாரா, இல்லையா என்பது அவர் கொரானாவிலிருந்து மீண்ட பிறகு தெரிந்துவிடும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அப்படியா?

இதையும் படிங்க: எடப்பாடியை CM ஆக்குனதே நாங்கதான்.. மார்தட்டும் நயினார் நாகேந்திரன்.

click me!