ஆட்சியில் இல்லாதபோதே அடாவடிதனத்தில் ஈடுபடும் திமுக... போகும் இடமில்லாமல் ஸ்டாலினை விளாசும் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Feb 17, 2021, 4:29 PM IST
Highlights

தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகளை அதிமுக உடனே நிறைவேற்றும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகளை அதிமுக உடனே நிறைவேற்றும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்;- ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக கோட்டை. விவசாயி என்று நான் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். திமுகவிற்கு பெட்டி வாங்கியே பழக்கம். அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னோடு பெரிய பெட்டியினை கொண்டு செல்கிறார். 

விவசாயிகளைப் பாதுகாக்க கூடிய அரசு ஜெயலலிதா அரசு. விவசாயம் வளர வேண்டும் என்பதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. வருங்காலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கும். ஸ்டாலின் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுவது செல்லுபடியாகாது. நாட்டு மக்களை பார்க்காத கட்சி திமுக. நாட்டு மக்களை மறந்ததன் காரணமாக, நாட்டு மக்கள் இன்று திமுகவை மறந்துவிட்டனர். 

மேலும், தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதன் காரணமாக இந்த பருவ மழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளது. ஸ்டாலின் பொய்யான தகவல்களை சொல்லி இந்த தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கிறார். ஒருபோதும் கனவு பலிக்காது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. ஆட்சியில் இல்லாத இப்போது அடாவடிதனத்தில் ஈடுபடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

click me!