வழக்கமாக விடுமுறை நாட்களில் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம், ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு பொது விடுமுறையையான இன்று மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக விடுமுறை நாட்களில் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம், ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று சென்னை மெரினா, பெசன் நகர் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் பெரும்பாலானோர் நடைப்பயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும், மாலை நேரத்தில் பொழுதுபோக்கிற்காக தங்களுடைய குடும்பத்துடன் கடற்கரைக்கு கூட்டமாக வருவது வழக்கமாக இருந்த நிலையில் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாளான இன்றும் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் காமராஜர் சாலை நடைபாதையில் நடைபயணம் மேற்கொண்டனர்.கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது சற்று வருத்தம் அளிப்பதாகவும், அதே நேரத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு விதிக்கும் விதி முறைகளை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்று என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.