தேவேந்திரகுல வேளாளர் மசோதா சட்டமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Mar 29, 2021, 4:08 PM IST
Highlights

பல்லாண்டு கணக்காக சுதந்தரம் அடைந்த காலந்தொட்டு இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கிற நமது சமுதாயத்தின் அடையாளமாக, தேவேந்திரர் என்பதை நரேந்திரர் என பாரதப் பிரதமர் அவர்கள் உங்களுக்காக அறிவித்து, உங்களுக்கு இன்றைக்கு அடையாளத்தைக் கொடுத்து இருக்கிறார்கள்.

தேவேந்திரர்களை நரேந்திரராக அறிவித்து பாரதப் பிரதமர் மக்களவையில் நிறைவேற்றிய மசோதா, மக்களவையிலும் நிறைவேறி அரசாணை வெளியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி உதயகுமார் அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு கூறினார். மதுரை திருமங்கலத்தில் கடந்த முறை வென்று அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் அதிமுக வேட்பாளராக மீண்டும் திருமங்கலத்தில் களமிறங்கியுள்ளார்.  அவரை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறனும், அமமுக கூட்டணி சார்பில் மருது சேனா சங்கம் நிறுவனர் ஆதி நாராயணனும் போட்டியிடுகின்றனர். தனது கடந்த கால சாதனைகளைச் சொல்லி எளிதில் வெற்றிப் பெற்று விடலாம் என்று நினைத்த அமைச்சருக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்கள் பலமானவர்கள் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த திருமங்கலம் தொகுதியில் தனது கட்சித் தலைவி மறைந்த ஜெயலலிதா அம்மையார்க்கு கோயில் கட்டி, அதிமுக தொண்டர்களிடையே பெயர் பெற்று இருந்தாலும்,  வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல என்ற நிலை உள்ளது. எனவே கடந்த ஒரு வார காலமாக, தனது மகள் பிரியதர்ஷினியுடன் திறந்த வேனில் தினந்தோறும் கிராம கிராமமாகச் சென்று காலை, மாலை என இரு வேளைகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இன்று டி. கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதியின் மேற்கு எல்லையான, தேவேந்திர சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கிராமமான முருகனேரியில்பேசும்போது கூறியதாவது: 

பல்லாண்டு கணக்காக சுதந்தரம் அடைந்த காலந்தொட்டு இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கிற நமது சமுதாயத்தின் அடையாளமாக, தேவேந்திரர் என்பதை நரேந்திரர் என பாரதப் பிரதமர் அவர்கள் உங்களுக்காக அறிவித்து, உங்களுக்கு இன்றைக்கு அடையாளத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். அம்மாவின் அரசிற்கு நீங்கள் தோள் கொடுத்து, துணை நின்று, இன்றைக்கு மக்கள் அவையிலே நிறைவேறி இருக்கிற அந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறி அரசாணை வெளியிடுகிற நாள் வெகு தொலைவில் இல்லை என கூறினார்.அமைச்சர் பேசுவதற்கு முன், அவரது மகள் பிரியதர்ஷிணி தனது தந்தைக்காகப் பேசி வாக்குகள் சேகரிப்பது அதிமுகவினரிடையே உற்காகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!