முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி.சண்முகம் பற்றி அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி.சண்முகம் பற்றி அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் கடந்த 23-ம் தேதி அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "பழனிசாமி கம்பெனி காந்தி நோட்டை நம்பியே தேர்தலில் நிற்கிறது. இங்கு ஒருவர் இருக்கிறார். உண்மையைச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது. நமது இலக்கு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதுதான். இந்தத் தொகுதியில் ரூ.200 கோடியைப் பதுக்கி வைத்துள்ளனர். இது யாருடைய பணம்? எல்லாம் மக்களின் வரிப்பணம். பணம் உங்களைத் தேடி வரும். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள்.
பழனிசாமி கம்பெனி ஆட்சிக்கு வரப்போவதில்லை. எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வீட்டுக்கு வீடு 6,000 ரூபாய், 10,000 ரூபாய் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டார்கள். அதுபோல், இங்கு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கலாம் என்று முதலில் நினைத்தார்கள். இப்போது பயம் வந்து ஆர்.கே.நகர் மாதிரி 6,000 ரூபாய் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு கதையை முடித்து விடுங்கள் என பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து வழக்கறிஞர் பாபு முருகவேல், முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சரை இழிவாகப் பேசியதாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கலவரத்தை ஏற்படுத்துதல், அவமதித்து பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.