அண்மையில் பள்ளி மாணவர்களுக்காக பிரதமர் மோடி எழுதிய 'Exam warriors' என்ற புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கியுள்ளார்.
எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.
அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். நீட் தேர்வு பயிற்சிக்கு 70,412 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் எனவும் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு பள்ளி பொதுத்தேர்வு முடிந்ததும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரங்களை அறிய ஆண்டுதோறும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் பொதுதேர்வு குறித்த அறிவிப்புகளும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுக்காக 'Exam warriors' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதைதொடர்ந்து இன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் செங்கோட்டையைனை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கினார்.