
இரு அணிகளின் பேச்சுவார்த்தை தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு உச்ச கட்ட குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
அதைதொடர்ந்து நான் விலகினால் கட்சி நல்லா இருக்கும் என்றால் நானே விலகி கொள்கிறேன் என டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், ஒ.பி.எஸ் தரப்பு தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என்று கூற அதற்கு எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் மறுப்பு கூற மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேச்சுவார்த்தை கனவு அவ்வளவு தான் என்று எதிர்பார்த்த நிலையில், எடப்பாடியும் ஒ.பி.எஸ்சும் தனது அணிகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து எடப்பாடி தரப்பில், ஒ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 7 கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைக்குள் தனது தரப்பிலும் குழு அமைக்கப்படும் என ஒ.பி.எஸ் கூறியிருந்தார்.
அதன்படி தற்போது முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தலைமையில், 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் இந்த குழுவில் உள்ளனர்.
இரு தரப்பிலும் குழு தயாரான நிலையில், பேச்சுவார்த்தை எப்போது என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரு அணிகளின் பேச்சுவார்த்தை தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்தார்.