இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! பங்கேற்பார்களா தென் மாவட்ட நிர்வாகிகள்..?

By Ajmal KhanFirst Published Oct 10, 2022, 8:02 AM IST
Highlights

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால்  தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள்  தெரிவித்துள்ளனர். 

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என அதிமுக செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக யாருக்கு என்ற போட்டியின் காரணமாக நீதிமன்றத்தில் இரு தரப்பும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது இரு தரப்புக்கும் சாதகமாக மாறி மாறி வருகிறது. இதனையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கானது நிலுவையில் உள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்பாகவும், அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி சிறப்பு பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எடப்பாடி அணியில் இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் அணிக்கு மாறி வருவது குறித்து முக்கிய ஆலோசனையாக இடம்பெறும் என கூறப்படுகிறது.  

மேலும் ஆட்சி அதிகாரத்தை இழந்து எதிர்கட்சியாக உள்ள நிலையில் திமுகவை எதிர்ப்பதற்கு பதிலாக உட்கட்சி மோதல் மிகப்பெரிய தாக்கத்தை அதிமுகவில் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால்  தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள்  தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஆளுநர் பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா? தமிழிசையை சைலண்டாக வாரிய ராஜீவ் காந்தி..!

 

click me!