
சசிகலாவால்தான் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் பேசினார்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில், நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் பேசியதாவது:-
கூவத்தூரில் எம்எல்ஏக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியவர் சசிகலா. அந்த பேச்சு வார்த்தை ஏற்பட்ட உடன்பாடுகாரணமாக இன்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கிறார்.
சசிகலா முயற்சி மேற்கொண்டதால், இன்று எடப்பாடி முதல்வராக இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, தமிழகத்தில் நல்லபடியாக ஆட்சி நடந்தது. இதற்கும் சசிகலாவின் முயற்சியே காரணம்.
சுமார் 30 ஆண்களுக்கு மேலாக ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. அவரது அரசியல் யுக்தி, சாதனை அனைத்திலும் சசிகலாவுக்கு பங்கு உண்டு. இன்று தனி அணியாக பிரிந்தவர்களால் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எந்த ஒரு பயனும் இல்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் மட்டுமே அனைத்தும், அனைவருக்கும் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.