சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.கே தஹில் ரமாணி, அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு வீடுகள் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டிருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் அவரது பதவியை ஏற்றுக் கொண்டதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் நடத்திய பிரிவு உபச்சார விழாவில் பேசிய தஹில் ரமானி, தனக்கு சென்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், இங்கு வீடு வாங்கியிருப்பதாகவும் அதனால் சென்னையிலேயே குடியேறப் போவதாகவும் தெரிவித்தார். தஹில் ரமானியின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சென்னை புறநகரில் ரூ.3 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு வீடுகளை தஹில் ரமாணி வாங்கியுள்ளார் என்றும், தஹில் ரமாணி உயர் நீதிமன்ற பதவியில் இருந்து விலகிய பின்னர் மத்திய உளவுத்துறை 5 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
அதில் தஹில் ரமாணி அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும், சிலை கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை அவர் தள்ளுபடி செய்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.