கோயில் நகைகள் தங்க கட்டிகளாக மாற்றம்.. தூசி அளவுகூட தவறு நடக்காது.. ஐயப்பன் மீது அமைச்சர் சேகர்பாபு ஆணை.!

By Asianet TamilFirst Published Sep 29, 2021, 9:26 PM IST
Highlights

கோயில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் விஷயத்தில் சிறு தூசி அளவுகூட தவறு நடக்காது என ஐயப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 

தமிழகத் திருக்கோயில்களில் பக்தர்கள் தானமாகவும் காணிக்கையாகவும் அளித்த நகைகளை, தங்கக் கட்டிகளாக மாற்றப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசியிருக்கிறார். “திருச்சி சமயபுரம் கோயிலில் மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகளை கட்டி வைத்திருப்பதாக கூறினார்கள். இதை முதல்வரின் கவனத்துக்கு நான் கொண்டு சென்றேன்.
 தானமாக அளிக்கப்பட்ட நகைகளையோ இறைவனின் பயன்பாட்டில் உள்ள நகைகளையோ உருக்குவதில்லை. பயன்பாட்டில் இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டிருக்கிறோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்கவில்லை. 1000 ஆண்டுகள் பழமையான நகைகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஓய்வுப் பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில்தான் நகைகள் கணக்கிடும் பணி நடைபெற உள்ளது. நகைகளைப் பிரிக்கும்போது அவை முழுவதும் வீடியோவாக எடுக்கப்படும்.


அந்த நகைகள் எம்மால் மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் வழங்கப்படும். அங்கு  நகைகளை அளித்து 24 கேரட் தங்க பிஸ்கட்டுகளாக பெற்று வைப்பு வங்கியில் வைக்கப்படும். அதற்கு வட்டித் தொகை பெரிய அளவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். இது இறைவன் சொத்து. அது இறைவனுக்கே என்ற அடிப்படையில்தான் இத்திட்டமே. இதில்  சிறு தூசி அளவு கூட தவறு நடக்காது என ஐயப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். எனவே, இதை யாரும் விமர்சிக்க வேண்டாம். மற்ற திருப்பணி செலவுகளுக்கு இது தேவைப்படும்” என்று சேகர்பாபு தெரிவித்தார். 

click me!