
தமிழக அரசியல் இன்னும் 4 மாதங்களில் புதுவாழ்வு எடுக்கும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய துரைமுருகன், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் பணம் பிடிபட்டதாகக் கூறி, தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. 234 தொகுதிகளிலும் பண விநியோகம் இருந்தபாேதும், அதனை கண்டுபிடிக்க இயலாத தேர்தல் ஆணையத்துக்கு அபராதம்தான் விதித்திருக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவை தேர்தல் ஆணையம்தான் ஏற்க வேண்டும் என்று குற்றம்சாட்டிய அவா், தேர்தல் ஆணையத்தின் தவறான போக்கினால்தான் இந்த தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் வந்துள்ளது என்றும், இந்தத் தேர்தலிலாவது பண நடமாட்டம் இல்லாமல், தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
இதனையடுத்து அரவக்குறிச்சி வேட்பாளா் கே.சி. பழனிச்சாமி ஆதாித்து பேசிய துரைமுருகன், யார் ஒருவர் தனது தொகுதியை தெய்வமாக நினைக்கிறாரோ, அவரே வெற்றி பெறுவார். சூதாட்ட களமாகப் பயன்படுத்துபவர் அழிந்துவிடுவார். கே.சி.பழனிச்சாமி தனது தொகுதியை தெய்வமாக நினைப்பதையும் தாண்டித் தனது சொந்தச் செலவில் கோயிலே கட்டிக்கொடுக்கிறார். அதனால் இத்தோ்தலில் அவர் வெற்றி பெறுவாா் என உறுதிபடத் தொிவித்தாா்.
முதலமைச்சா் இல்லாமல் இருக்கலாம் என்றும், ஆனால் அரசாங்கம் நடக்காமல் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்ட துரைமுருகன், இன்னும் 4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும் என்றும், அப்போது, கே.சி.பழனிசாமி அமைச்சராக இருப்பார் என்றும் கூறினாா்.