
ஜெ மரணம் குறித்து விசாரணை செய்து அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர் 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த நாட்கள் முழுவதும் சசிகலா தவிர யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருவதாகவும், சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இட்லி போன்ற உணவுகள் உட்கொண்டார் எனவும் தகவல்களை வெளியிட்டனர்.
ஆனால் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா இறந்த நிலையிலேயே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து சசிகலாவிடம் பதவிக்காக சண்டை போட்டு வெளியேறிய ஒபிஎஸ் ஜெ மரணத்தில் மர்மம் இருப்பதாக தர்ம யுத்தத்தை நடத்தி வந்தார்.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் அவரால் நியமிக்கப்பட்ட டிடிவியை ஓரங்கட்டிவிட்டு ஒபிஎஸ்சை சேர்த்து கொண்டார் முதலமைச்சராக தேர்வான எடப்பாடி.
ஆனால் ஒபிஎஸ் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதனால் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமயில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் தமிழக அரசு அரசானை வெளியிடாமல் இருந்து வந்தது. இதனால் பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், ஜெ மரணம் குறித்து விசாரணை செய்து அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.