#BREAKING தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பேரிடி... ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 23, 2021, 11:35 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும்  அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில்  தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றின் 2வது அலைக்கு தமிழகமும் தப்பவில்லை. குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அதிக அளவில் குவிந்த மக்கள் முகக்கவசம் அணியாததும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததும் தான் கொரோனா தொற்று தீவிரமாய் பரவ முக்கிய காரணமாக அமைந்தது. 

தேர்தலுக்கு முன்பே திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக என கட்சி வேறுபாடின்றி பல வேட்பாளர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் வேட்பாளர்கள் இல்லாமலேயே வாக்கு சேகரிக்கும் சம்பவங்களும் இந்த தேர்தலில் தான் அரங்கேறியது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி இரவு 7 மணியோடு நிறைவடைந்த நிலையில், அதன் பிறகாவது வேட்பாளர்களை படாய்படுத்தும் கொரோனாவின் தாக்கம் குறையுமா? என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு பிரச்சாரத்தில் ஈடுபட்ட  வேட்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ்,  திமுக எம்.பி. கனிமொழி உட்பட  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர். அதிமுக மூத்த தலைவரும், அவைத்தலைவருமான மதுசூதனன் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவ்ராவ்  நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த சோகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மீள்வதற்குள் அக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!