மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்த சொல்லுச்சா.? ஏன் புழுகுறீங்க.? திமுக அரசை அண்ணாமலை கிழி.!

By Asianet TamilFirst Published Apr 3, 2022, 10:26 PM IST
Highlights

"விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.” 

தமிழக அரசு சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது பொய்யான புகாரை கூறுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தமிழக அரசு சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதுபற்றி தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், “மார்ச் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரியை உயர்த்தினால்தான் மத்திய அரசின் நிதி கிடைக்கும் என்ற  நிபந்தனையால்தான் உயர்த்த நேரிட்டது” என்று விளக்கம் அளித்திருந்தார். தமிழக அரசின் இந்த விளக்கத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுடொடர்பாக அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

திமுக பொய்யான புகார்

அதில், “மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் எந்த இடத்திலும் சொத்து வரியை உயர்த்த சொல்லவில்லை. குறைந்தபட்ச நில அளவைக்கு ஏற்ப, குடியிருப்பு, வணிகம், தொழில் சார்ந்த பகுதிகள் எனப் பிரித்து, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களை பதிவு செய்ய வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப் போனால், தாங்கள் விதிக்கும் வரி விகிதாச்சாரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மட்டும்தான் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க மனத் துணிவு இல்லாமல், மத்திய அரசின் மீது பொய்யான புகாரை தமிழக அரசு தெரிவிக்கிறது.

பாஜக கண்டனம்

இந்த விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

click me!